20 செமீ பெய்தால்.. மழை நீர் வீட்டிற்குள் வரும்.. அந்த 2 மணி நேரம் நடந்தது என்ன? வெதர்மேன் வார்னிங்
சென்னை: இன்று சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது. சென்னையில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் மற்றும் தண்டையார்பேட்டையில் 6.1 செ.மீ மழை பெய்துள்ளது.
கடந்த 12 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 1,500 அழைப்புகள் வந்துள்ளன. அதில் 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள போஸ்டில், இன்று காலை 8.30 மணி வரை சுமார் 80 முதல் 90 மிமீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. காலை 8.30 மணிக்குப் பிறகு 10.30 மணி வரை மேலும் 50 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தீவிரமான மழைகளில் ஒன்றாகும் இது. மேலும் இது நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் ஒரு ஸ்பெஷல் மழை பெய்ய போகிறது. வங்கக்கடலில் உள்ள குறைந்த காற்று அழுத்தம் இன்னும் தொலைவில் உள்ளது என்பதை நினைவில் கொள்க.
மக்கள் இப்போது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.. மழை 10 செ.மீ என்றால் தண்ணீர் தேங்கும். அதுவே 20 செ.மீ தண்ணீர் என்றால் வெள்ளம் வீட்டிற்குள் வரும். அந்த விழிப்புணர்வைத்தான் நான் எல்லோர்க்கும் சொல்ல முயற்சிக்கிறேன்.
மேகங்கள் கொஞ்சமும் பலவீனமடைவதாக நான் நினைக்கவில்லை. அது மேலும் மேலும் குவிந்து அசையாமல் இருப்பதாக தோன்றுகிறது. இது யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல. இந்த மழையில் இடைவெளி இருக்காது போல் தெரிகிறது. இனி கொஞ்சம் கொஞ்சமாக மேகங்கள் மேலும் மேலும் குவியும். மேலும் குறைந்தது 3 மணி நேரத்திற்கு அதிகமாக மழை பெய்யும். எனவே, அலுவலகத்திற்கு வந்தவர்கள் சீக்கிரம் கிளம்பலாம்.
நாளையும் மழை மேலும் வலுப்பெறும். சென்னையில் நள்ளிரவில் இருந்து சில இடங்களில் 200 மிமீ மழை பெய்துள்ளது, என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சன் நியூஸுக்கு அளித்துள்ள பேட்டியில், சென்னையில் 6000 சதுர கி.மீ பரப்பளவில் பெய்யும் மொத்த மழையும் நான்கு வழிகளில் (எண்ணூர், நேப்பியார், அடையாறு, ஒக்கியம் வழியாக கோவளம்) மட்டுமே வெளியேறுகிறது. சென்னையால் 15 செ.மீ மழையை தாங்க முடியும். 20 செ.மீ பெய்தால் ஒரு நாள் நீர் தேங்கும். 30 செ.மீ மழை பெய்தால் பள்ளிக்கரணை, புளியந்தோப்பு, முடிச்சூர் போன்ற நீர்நிலைகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் கண்டிப்பாக மழைநீர் தேங்கும். 40 செ.மீ மழை பெய்தால் 4 நாட்கள் நீர் தேங்கும் என்ற சூழலில்தான் உள்ளோம். மழைநீர் வடிகால் என்பது சாலைக்காக | போடப்படுவது. 40 செ.மீ அளவுக்கு பெய்யும் போது மழைக்காக வடிகால் அமைக்க முடியாது. நம் பகுதியின் சூழலை புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்., என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications