இப்போ கொஞ்சம் ரெஸ்ட்.. தமிழகத்தில் அடுத்த ரவுண்டு மழை எப்போ ஸ்டார்ட்? அலர்ட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே குளிர்ச்சியான ஒரு வானிலை நிலவி வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு இது தொடரும் எனக் கூறியுள்ள வானிலை மையம், எப்போது முதல் மாநிலத்தில் மழை பெய்யும் என்பது குறித்தும் வானிலை மையம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் (ராமநாதபுரம் மாவட்டத்தில்) ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்துள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் கன்னியாகுமரியில் 32.5 ° செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாகக் கரூர் பரமத்தியில் 16.0° செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது.
வானிலை மையம்:
வரும் நாட்களில் நிலவும் வானிலை தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் தென்னிந்தியப் பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
வரும் ஜனவரி 28ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் ஜனவரி 29ம் தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
எப்போது மழை ஸ்டார்க் ஆகும்:
வரும் ஜனவரி 30ம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜனவரி 31ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பிப்ரவரி 1ம் தேதி உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்:
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (26-01-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (27-01-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோர பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகளில் எச்சரிக்கை ஏதுமில்லை. வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications