வடதமிழகம் நோக்கி நகரும் மிக்ஜாம் புயல்.. எங்கெல்லாம் தாக்கம் இருக்கும்? வானிலை மையம் அப்டேட்
சென்னை: வங்கக் கடலில் உருவாகும் மிக்ஜாம் புயல் வடதமிழகம் நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது.

இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக் கூடும்.
இதற்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கணிக்கப்பட்டது. ஆனால் இது தாமதமானதால் டிசம்பர் 2ஆம் தேதி புயல் உருவாகும் என கணிக்கப்பட்ட புயல் டிசம்பர் 3 ஆம் தேதி மிக்ஜாம் புயல் உருவாகும்.
இந்த மிக்ஜாம் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியிருப்பதாவது: காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறியுள்ளது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 3ஆம் தேதி புயலாக மாறும். இந்த புயல் வடதமிழகத்தை நோக்கி நகரும். அங்கிருந்து தெற்கு ஆந்திரா பகுதிக்கு செல்லும்.
டிசம்பர் 4 ஆம் தேதி வரை அந்த புயலானது அதே இடத்தில் நிலவும். இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். மணிக்கு 43 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். நாகை முதல் தெற்கு ஆந்திரா வரை புயலின் தாக்கம் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் புயல் காரணமாக 16 இடங்களில் மிக கனமழையும் 51 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிக்ஜாம் புயல் எங்கே கரையை கடக்கும். மேலும் வடதமிழகம்- தெற்கு ஆந்திரா பகுதியில் வலுப்பெறுமா, வலுவை இழக்குமா என்பதை பொறுத்திருந்துதான் சொல்ல முடியும் என பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications