தீபாவளி நாளில் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்.. நாலே வரியில் நறுக்கென விளக்கிய வெதர்மேன்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தீபாவளி நாளில் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.
இந்தாண்டு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுக்கவே நல்ல மழை இருப்பதால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பிவிட்டன.

குறிப்பாகக் கடந்த சில நாட்களாகத் தென்தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்தது.
தீபாவளி நாள்: மழை இப்படித் தொடர்ந்து பெய்யும் நிலையில், தீபாவளி நாளில் மழை இருக்குமா என்பதே இங்குப் பலரது கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால் நமது நாட்டில் மிகப் பெரியளவில் கொண்டாடப்படும் பண்டிகையாகத் தீபாவளி இருக்கிறது. சாதி, மொழிகளைக் கடந்து பல்வேறு தரப்பினரும் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். இந்தாண்டு வரும் வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுகிறது.
வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் லாங் வீக் எண்டாக வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு இன்றே கிளம்பிவிட்டனர். அதேநேரம் மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தீபாவளியன்று மழை பெய்யுமா என்பதே இங்கு பலருக்கும் எழுந்துள்ள கேள்வியாக இருக்கிறது.
வெதர்மேன்: இதற்கான பதிலைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அளித்துள்ளார். தீபாவளி நாளில் எங்கெல்லாம் மழை இருக்கும்.. எங்கெல்லாம் மழை இருக்காது என்பது குறித்த தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் மழையின் கடைசி நாட்கள். தீபாவளி நாளில் இருந்து இது கிழக்கு நோக்கி மாறும். டெல்டா மற்றும் தெற்கு மற்றும் உள் தமிழகத்தின் சில பகுதிகளில் தீபாவளி நாளில் மழை பெய்யும்.
கேடிசிசி(சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில்) தீபாவளி நாளில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாக அதிகாலை மழை பெய்யக்கூடும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கேடிசிசி பகுதிக்கு இது ஒரு நல்ல தீபாவளியாக இருக்கும். அதே சமயம் டெல்டா, உள் மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும்" என்று பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "தென்னிந்தியக் கிழக்கு கடலோர பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் அக். 31ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.1ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று வானிலை மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications