சென்னையை புரட்டி போட்ட மழை.. நிழலாடும் 2015! வானில் நடக்கும் கடமுடா சப்தங்கள்! காரணம் என்ன?
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழை பெய்தது ஏன் என்பது குறித்து சென்னை வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியது. தற்போது தீவிரமாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகியுள்ளது.

இது நேற்று ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்றது. இந்த நிலையில் இது இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றைய தினம் கனமழை பெய்தது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியது. நேற்று இரவு திநகர், கொளத்தூர், தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் சென்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் மிக கனமழை பெய்யும் என்றே வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. 100 முதல் 150 மி.மீ. வரை கொட்டிய மழையால் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் சென்னையின் மீது மேக குவியல்கள் அதிகமாக காணப்படுவதால் கனமழை பெய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த மழையால் அலுவலகம் முடித்துக் கொண்டு வீடு திரும்புவோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் இருந்தன. இந்த நிலையில் இதுபோன்று 3 மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழைக்கு என்ன காரணம் என்பதை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் தற்போது இரு சிஸ்டம்கள் இருக்கின்றன. ஒன்று இலங்கையையொட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி இருக்கிறது. இந்த இரு சிஸ்டங்களால் கிழக்கு திசை காற்றால் மேகங்கள் கூடின. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
மேற்கு திசை காற்று, கிழக்கு திசை காற்று இரண்டும் சந்தித்துக் கொண்டதால் மழை பெய்தது. புழலில் 10 செ.மீ., நந்தனத்தில் 7 செ.மீ. பெய்துள்ளது. பொதுவாகவே மாலை நேரங்களில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபடும். மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திப்பதால் மேக கூட்டங்கள் உருவாகி கடல் பகுதியை ஒட்டிச் செல்வதை பார்க்கிறோம். கடலோர பகுதிகளில் மேகக் கூட்டங்கள் நிலவி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த பெருவெள்ளத்தின் போது எப்படி போக்குவரத்து பாதிக்கப்பட்டதோ அதே போல் இந்த ஆண்டும் நிகழ்ந்துள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆனால் அது போல் பெருவெள்ளம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என தமிழக அரசு மக்களுக்கு தைரியம் கொடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications