கேரளா: மார்க்சிஸ்ட் மாநாட்டைப் புறக்கணித்த அச்சுதானந்தனை சமாதானப்படுத்தினார் பிரகாஷ் காரத்!
ஆலப்புழை: கேரளாவின் ஆலப்புழையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டை புறக்கணித்த அக்கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தனுடன் கட்சி தேசிய செயலர் பிரகாஷ் காரத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் கட்சிப் பதவிகளை அச்சுதானந்தன் ராஜினாமா செய்யமாட்டார் என்று கூறப்படுகிறது.
கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஆலப்புழையில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மாநிலத் தலைமையின் செயல்பாடுகளை விமர்சித்து கட்சியின் மத்தியத் தலைமைக்கு அச்சுதானந்தன் எழுதிய கடிதத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அச்சுதானந்தன் கோஷ்டித் தலைவரைப் போல செயல்படுவதாகவும், அவரது செயல்பாடுகள் கட்சிக்கு எதிராக உள்ளதாகவும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. இதனால் அதிருப்தியடைந்த அவர், சனிக்கிழமையன்று மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் 2 பேர் அச்சுதானந்தனை நேரில் சந்தித்து சமரசம் செய்ய முற்சித்தனர். அப்போது, தனக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என அச்சுதானந்தன் வலியுறுத்தியதாகவும், இதனை கட்சித் தலைமை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மாநாட்டை முழுமையாகப் புறக்கணிப்பது என்று முடிவெடுத்த அவர் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டுச் சென்று விட்டார். இதனிடையே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமது ஆதரவாளர்களுடன் அச்சுதானந்தன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் அச்சுதானந்தன் விலகுவார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் பிரகாஷ் காரத், அச்சுதானந்தனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தியுள்ளார். அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாகவும் பிரகாஷ் காரத் இந்த உரையாடலின் போது உறுதியளித்திருக்கிறார். இதனால் அச்சுதானந்தன் எந்த ஒரு பதவியையும் ராஜினாமா செய்ய மாட்டார் என்றும் கூறப்படுகிறது.