ஒழுக்கமே இல்லாத வாழ்க்கை உயர்ந்த வாழ்க்கை என கருதுபவர் கமல்- அடங்காத எச் ராஜா
சென்னை: ஒழுக்கமே இல்லாத வாழ்க்கையை உயர்ந்த வாழ்க்கை என கருதுபவர் நடிகர் கமல் ஹாசன் என்று மிகவும் கீழ்த்தரமாக இறங்கி பேசியுள்ளார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா.
தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது என்று நடிகர் கமல் தனது செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் கமலை கண்டபடி விமர்சித்தனர்.
அமைச்சர் ஜெயகுமாரோ , கமல் அரசியலுக்கு வரட்டும் அப்போதுதான் தெரியும் என்று வெளிப்படையாக சவால் விட்டார். இந்நிலையில் நேற்று இரவு கமல், கவிதை வடிவில் தான் அரசியலுக்கு வருவது குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார்.
எச். ராஜா விமர்சனம்
இந்த டுவீட் குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, அரசின் மீது நடிகர் கமலஹாசன் மட்டும் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது. கமல் ஒரு முதுகெலும்பே இல்லாத கோழை. முதுகெலும்பு அற்றவர் முதல்வராக ஆசைப்படக்கூடாது என்றும் எச். ராஜா கூறியுள்ளார்.
கமல் அறிக்கை
இதைத் தொடர்ந்து இன்று இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தபோதே தான் அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், இது ஜெயக்குமாருக்கும், எச் ராஜாவுக்கும் தெரியாது என்றும் பதிவிட்டுள்ளார்.
எச். ராஜா பதில்
மேலும் எச்.ராஜா முதுகெலும்பு வல்லுனர் என்றும் கருத்து பதிவிட்டுள்ளார். இதற்கு பாஜக தலைவர் எச்.ராஜா பதிலளிக்கையில், அரசியலுக்கு வர கமல்ஹாசனுக்கு உரிமை உண்டு.
கமல் கோழை
முடிவெடுத்தால் முதல்வர் என்ற வரிக்குதான் நான் எதிர்த்தேன். பிரச்சனை என வரும்போது ஓடிப் போய்விடுவார் கமல். இன்னும் சொல்ல போனால் முதுகெலும்பு இல்லாத கோழை அவர்.
இந்து விரோதி
கமல் ஒரு இந்து விரோதி என்பதால் எதிர்க்கிறேன். வக்கிரமாக பேசக் கூடியவர். மேலும் ஒழுக்கமே இல்லாத வாழ்க்கையை உயர்ந்த வாழ்க்கை என்று கருதுபவர். மொத்தத்தில் தலைவருக்கான தகுதியே இல்லாதவர் என்றார் எச். ராஜா.