காந்தி ஜெயந்திக்கும், "வாசுவும் சரவணனுக்கும்" என்னய்யா சம்பந்தம்??
சென்னை: இன்று காந்தி ஜெயந்தி. டிவியைத் திறந்தால் சிறப்பு திரைப்படங்கள் நிரம்பி வழிகின்றன. எந்த சானலைப் போட்டாலும் சிறப்புப் படங்கள்தான். ஆனால் விஜய் டிவியில் கண்ட படம்தான் நம்மை ஜெர்க் அடிக்க வைத்தது.
பல இளம் குடிகாரர்கள் உருவாகக் காரணமாக இருந்த படம் என்று இதை வர்ணித்தார்கள். அந்த அளவுக்கு படம் முழுக்க குடி குறித்த விஷயங்கள் நிறையவே இருந்த படம் இது.
அதை விட முக்கியமாக தமன்னாவையும் இதில் பீர் அடிக்க வைத்திருப்பார் இயக்குநர் ராஜேஷ். அவரும் பீர் அடித்து விட்டு, 'என் இஷ்டம். நான் எந்த சரக்கு வேண்டுமானாலும் அடிப்பேன்' என்று வசனமும் பேசுவார்.
மது வாடை தான்...
படம் முழுக்க இதில் மது வாடைதான். டாஸ்மாக்கின் அறிவிக்கப்படாத தூதர்கள் போல இருப்பார்கள் இதில் இடம் பெற்ற கலைஞர்கள் அனைவரும். இப்படத்திற்கு முதலில் விஎஸ்ஓபி என்றுதான் பெயரே வைத்து பிரபலப்படுத்தினார்கள். அந்த அளவுக்கு மது வாடை பொங்கிப் போன படம் இது.
பிரச்சாரப்படம்...
வாசுவும், சரவணனுனும் ஒண்ணா குடிச்சவங்க என்றுதான் இப்படத்திற்கு பலர் விமர்சனம் எழுதியபோது கிண்டலடித்திருந்தனர். அந்த அளவுக்கு மது விருப்ப பிரசாரப்படமாக இது காட்சி தந்தது.
விஜய் டிவியில்...
இந்தப் படத்தைத்தான் இன்று விஜய் டிவியில் போட்டுள்ளனர். மதுவுக்கு எதிரானவர் மகாத்மா காந்தி அப்படிப்பட்டவர் பிறந்த நாளின்போது இப்படிஒரு படமா என்று வீடுகள் தோறும் விஜய் டிவிக்கு இன்று வசவு கிடைத்திருக்கும்.
அஞ்சான்...
இது பரவாயில்லை. சன் டிவியில் அஞ்சான் படம் போடுகிறார்கள். வன்முறையை வெறுத்து அகிம்சையைப் போதித்தவர் காந்தி. அப்படிப்பட்டவரின் பிறந்த நாளான்று அடிதடிக் காட்சிகள் நிரம்பிய அஞ்சான் படம் போடுவது சாலப் பொருத்தம்தான்!
நல்லவேளை காந்தி "ஜெயந்தி"யாச்சே என்று வை"ஜெயந்தி" மாலா படம் போடாம போனாங்களே!