நந்தினியின் வளர்ப்பு சரியில்லையாம்.. அதிமுக நிர்மலா பெரியசாமி கேவலமான பேச்சு!
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நந்தினி பற்றி மகா மட்டமான முறையில் கருத்து கூறிய நிர்மலா பெரியசாமிக்கு கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன.
சென்னை: டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு முறையும் சர்ச்சைக்குறிய வகையில் பேசிய வம்பை வாங்கிக் கட்டிக்கொள்வார் நிர்மலா பெரியசாமி. நந்தினி கொலை வழக்கு தொடர்பாக பேசிய நிர்மலா பெரியசாமி படு கேவலமாக பேசி சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் நந்தினி, இந்து முன்னணியை சேர்ந்த கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ந்தேதி மாயமான நந்தினி, 2017 ஜனவரி மாதம் 14ஆம் தேதி கீழ்மாளிகை எனும் கிராமத்தின் அருகே உள்ள ஒரு முந்திரி தோப்பில் உள்ள கிணற்றில் முழு நிர்வாண நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
தொலைக்காட்சி விவாதம்
இது குறித்த விவாதம் புதிய தலைமுறையில் நேர்பட பேசு நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. பெண்களின் பாதுகாப்பு பற்றி அலசப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அதிமுகவை சேர்ந்த நிர்மலா பெரியசாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், நந்தினியை அவரது பெற்றோர் சரியாக வளர்த்திருந்தால் இந்த கொடுமை நடந்திருக்காது என்று கருத்து கூறினார். இதனையடுத்து நிகழச்சியில் கலந்து கொண்ட மற்ற விருந்தினர்களுக்கும் நிர்மலா பெரியசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காவல்துறை சரியாகத்தான் செயல்பட்டது
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் நந்தினி பின்னுக்குத்தள்ளப்பட்டார் என்று ஆரம்பத்திலேயே சொன்ன நிர்மலா பெரியசாமி, அரசை குறை கூறக்கூடாது என்றார். காவல்துறை சரியாகவே செயல்பட்டது என்றார். பெண்களின் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் தருவதாக கூறினார்.
வளர்ப்பு சரியில்லை
இது கொடூரமான கொலைதான் நந்தினியை அவரது பெற்றோர் சரியாக வளர்க்கவில்லை என்றார். ஆதிக்க சாதி பையனை காதலித்திருக்கிறாள். கர்ப்பமாக இருந்திருக்கிறாள். இதை ஏன் பெற்றோர்கள் கவனிக்கவில்லை. இப்போது நீதி கேட்பவர்கள் முன்பே ஏன் கவனிக்கவில்லை என்றார். பெற்றோர் கண்காணிப்புடன் குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்றார். மணிகண்டனுக்கு தூக்கு தண்டனை தரவேண்டும் என்றார். நிர்பயா, சுவாதி, நந்தினி அனைவரும் ஒழுக்கங்கெட்டவர்கள் என்கிற ரீதியில் பேசினார் நிர்மலா பெரியசாமி.
நிர்மலா பெரியசாமி கருத்துக்கு கடும் கண்டனம்
நிர்மலா பெரியசாமி கருத்துக்கு உடன் பேசியவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது நந்தினிக்கு கொடுக்கப்பட்ட தண்டனையா என்று கேட்டனர்.
நிர்பயாவுக்காகவும் ஸ்வாதிக்காகவும் முன்வந்து செயல்படுபவர்கள் ஏன் கல்பனாக்களுக்கும் நந்தினிகளுக்கும் முன் வருவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் கொதித்துள்ளனர். விவாதத்தில் கலந்து கொண்ட நிர்மலா பெரியசாமி , பானுகோம்ஸ் இருவரும் நந்தினியின் ஒழுக்கம் குறித்தும் அவர் தாயின் வளர்ப்பு குறித்தும் மற்றும் நந்தினியை தலித் என்று அடையாளப்படுத்தியதால் தான் பொதுசமுகம் இது குறித்து பேசவில்லை என்றும் பேசி வழக்கை திசைதிருப்பியுள்ளனர் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாலபாரதி கொதிப்பு
நம் நாட்டில், அதுவும் தமிழ்நாட்டில் பெண்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்தே வரும் சூழலை, சமூகத்தின் மீது அக்கறை கொண்டோர் கவலையோடு அணுக வேண்டும். ஆனால், தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய, அதிமுகவைச் சேர்ந்த நிர்மலா பெரியசாமியின் பதிவு அப்படியாக இல்லை. என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பாலபாரதி கூறியுள்ளார்.
தராசு இருக்கிறதா
தன் பெண்ணைப் பறிகொடுத்திருக்கும் அந்த எளிய குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லாமல், அவர்களையே குறை சொல்வது கொஞ்சமும் நியாயமில்லை. இதை, ஜாதிய ஆணவத்தின் கருத்து உடையவரின் வெளிப்பாடாகவே பார்க்க முடியும். ஒழுக்கம் பற்றி பேசுகிறார். இவர் இந்த ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும் என யாருடைய அளவுகோல் வைத்து அளக்கிறீர்கள். அதிமுக வில் இதற்கென தராசு வைத்திருக்கிறார்களா என்ன? என்றும் பாலபாரதி கேட்டுள்ளார்.
நான் சரியாத்தான் சொன்னேன்
நிர்மலா பெரியசாமியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தான் சரியாக தான் கருத்து தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். நான் வாழ்க்கையில் கடைபிடிக்கும் விஷயங்களை தான் ஊடகத்தில் பேசியுள்ளேன். நந்தினி விஷயத்தில் குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அத்தனை கொடூரமாக அந்த பெண்ணை சித்ரவதை செய்து கொலை செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்
அதே சமயம் ஒரு பெண்ணாக நந்தினியின் பெற்றோரின் அலட்சியத்தை தான் ஊடகத்தில் குறிப்பிட்டு இருந்தேன். சில வீடுகளே உள்ள கிராமத்தில் 16 வயது பெண் கர்ப்பம் அடைந்தது குறித்து தெரியாமல் நந்தினியின் பெற்றோர் இருந்திருக்கிறார்கள். நம் பிள்ளைகளை நாம் கண்காணிக்க வேண்டும். அப்படி கண்காணித்தாலே பாதி குற்றம் குறையும் என்ற கருத்தை தான் முன் வைத்தேன் என்று கூறியுள்ளார். பெண்கள் தைரியத்துடன் பயணிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார் நிர்மலா பெரியசாமி.