சட்டசபைத் தேர்தலில் அதிமுக, .திமுகவுடன் கூட்டணி இல்லை... அறிவித்தார் வைகோ!
திருப்பூர்: சட்டசபை தேர்தலில் எந்த திசையில் பயணிப்போம் என்பதை திருப்பூர் மாநாடு தீர்மானிக்கும் என்று 6 மாதங்களுக்கு முன்பே சொன்னார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. திருப்பூர் மாநாட்டில் நேற்று பேசிய வைகோ, 2016 சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., அ.தி.மு.க. உடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். முதல்வர் யார் என்பதை தேர்தலுக்குப் பின்னர் அறிவிப்போம் என்றும் வைகோ கூறியுள்ளார்.
அண்ணாவின் 107வது பிறந்த நாள் மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று நடைபெற்றது. மதிமுக ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில், மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் . ராமசாமி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில், ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை உறுதி செய்திட தமிழக அரசு லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வர வேண்டும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பினாங்கு துணை முதல்வர்
அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர்த்து வைகோ கூட்டணி அமைக்க வேண்டும் என்று பினாங்கு துணை முதல்வர் ராமசாமி விருப்பம் தெரிவித்து உள்ளார். பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி பேசும்போது, ''5 ஆண்டுகளாக இந்த மண்ணில் கால் வைக்க முடியாத நிலை இருந்தது. அந்த கவலையை வைகோ தீர்த்து வைத்துள்ளார். நான் இந்தியாவிற்கு எதிரி அல்ல. சர்வதேச விசாரணை கமிஷன் கொடுக்க வேண்டும் என கூறியதற்கு தண்டனையாக 5 ஆண்டுகள் நாட்டிற்குள் வர முடியாத நிலை ஏற்பட்டது.
திராவிடர் கொள்ளை தேவை
25 ஆண்டுகளாக தமிழ் ஈழ பிரச்னையில் நேர்மையாக செயல்படுபவர் வைகோ. தாழ்த்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களுக்கு திராவிடர் கொள்கை தேவை. இங்குள்ள இரண்டு கட்சிகளை பார்த்து திராவிடத்தை எடைபோட வேண்டும். திராவிடர்கள் இருந்தால் மட்டும் போதாது. மகத்தான தலைமைத்துவம் தேவை. நவீன சிந்தனை கொண்ட அரசியல் தேவை. மலேசியாவில் 30 லட்சம் தமிழர்கள் உள்ளனர்
தமிழ் இன துரோகிகள்
மலேசியாவில் தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள், அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. இதற்கு காரணம் மலாய், இஸ்லாமியம்.
ஆனால், துரோகம் செய்தது அங்குள்ள தமிழ் தலைவர்கள். இந்த இனத்திற்குள் பல துரோகிகள் உள்ளனர். தமிழர்களுக்கு என தனி நாடு இல்லை. பிரபாகரன் இதற்காகத்தான் போராடினார். வைகோ சாதாரண அரசியல்வாதி அல்ல. தேர்தலில் களத்தில் இறங்கி ஆட்சி அமைக்க வேண்டும் என நினைப்பது தவறல்ல. இங்குள்ள நிலையை மாற்ற வேண்டும்; மிகப்பெரிய அரசியல் மாற்றம் தேவை.
நேர்மையான அரசியல்
அதிகாரம் வேண்டும், அதை வைகோ பெற வேண்டும். வைகோ கூட்டணி அமைக்க வேண்டும். இரண்டு கட்சிகளை தவிர்த்துவிட்டு, ஆட்சி அமைக்க வேண்டும். நேர்மையான அரசியல் செய்யுங்கள், மக்கள் உங்களை ஏற்றுக்கொள்வார்கள். ஈழத்தை மட்டும் கைவிட வேண்டாம். ஆயிரம் போராட்டங்கள் வந்தாலும் முற்போக்கு, நவீன அரசியல் மூலம் தனி ஈழம் அமைக்க வேண்டும்" என்றார்.
வைகோ பேச்சு
பினாங்கு துணை முதல்வர் ராமசாமியின் பேச்சை கூர்ந்து கவனித்த வைகோ, அடுத்து மைக் பிடித்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தித் திணிப்பு செயலில் ஈடுபடுகிறது. ஐ.நா. சபையில் இந்தியை அலுவல் மொழியாக்க முயற்சிக்கிறது. ஐ.நா. சபையில் அலுவல் மொழியாக்க தகுதியுடைய ஒரே மொழி தமிழ் மட்டுமே.
கல்வியில் சமஸ்கிருதம்
இதுதவிர, கல்வித்துறையில் சமஸ்கிருதத்தை திணிக்கிறது. இன்றைய சூழலில் இந்தியாவில் கல்வித்துறை காவித்துறையாக மாறிக் கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஒரே தீர்வு சுதந்திர தமிழ் ஈழம் மட்டுமே. அங்கு நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.
சட்டசபை தேர்தல் கூட்டணி
தமிழகத்தில் வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுடனும் மதிமுக கூட்டணி வைக்காது. இரண்டு கட்சிகளுமே ஊழலில் திளைத்துப் போயுள்ளன. இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ள மக்கள் நலக் கூட்டியக்கத்துடன் எங்களது கூட்டணி இருக்கும்.
மனிதநேய மக்கள் கட்சி
மக்கள் நலக் கூட்டியக்கத்தில் மனித நேய மக்கள் கட்சி சேர வேண்டும். எங்களது கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தல் வெற்றிக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்றார். வைகோவின் இந்த அழைப்பு திமுக தலைவர் கருணாநிதியை கோபம் அடையச் செய்துவிட்டது. எங்களது கூட்டணியை உடைக்க நினைப்பதா என்று முப்பெரும் விழாவில் பேசிய போது பொங்கி தீர்த்துவிட்டார் கருணாநிதி.
பொசுக்கென்று போனதே
லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்று ஒரு ஆண்டுக்கு முன்பாகவே அறிவித்து அதற்கான வேலைகளை செய்யத் தொடங்கிய வைகோ, சட்டசபை தேர்தலின் போது மட்டும் சரியான முடிவுகளை எடுக்காமல் இப்படி தடுமாறுவது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர் மதிமுகவினர். வைகோவின் இந்த முடிவினால் இன்னும் எத்தனை பேர் கட்சி தாவ தயாராக இருக்கிறார்களோ தெரியலையே.