கொட்டும் மழையால் கோடையில் நிரம்பும் அணைகள்... தீரும் குடிநீர் பஞ்சம்
நெல்லை: தென்மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருக்காது என்று நிம்மதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 15 நாட்களாகவே தென் மாவட்டங்களின் பல பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கோடை வெப்பம் வெகுவாக தணிந்து குளுமை பரவி வருவதால் நெல்லைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில்
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஓரு வாரத்திற்கும் மேலாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக மக்களை வாட்டி வந்த வெப்பம் தணிந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் லேசான மழை அவ்வப்போது பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
உயரும் நீர்மட்டம்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கருப்பாநதி அணையில் 32.81 அடியாக இருந்த நீர்மட்டம் ஓரே நாளில் 34.45 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 31கன அடி தண்ணீர் வருகிறது. குண்டாறு அணை நீர்மட்டம் 15.40 அடியாக உள்ளது.
அணைப்பகுதியில் 10 மிமீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 74.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 195 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 86.32 அடியாக உள்ளது. அணைக்கு 6 கன அடி தண்ணீர் வருகிறது.
பரவிய குளுமை
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை சிவகிரியில் அதிகபட்சமாக 55 மிமீ மழை பதிவாகியுள்ளது. செங்கோட்டையில் 22, சங்கரன்கோவில் 27, தென்காசி 18மிமீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த மழையின் காரணமாக கோடை வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.
பொள்ளாச்சியில் மழை
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. காலையில் சுட்டெரிக்கும் வெயிலும்; மாலையில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழையும்; இரவு நேரத்தில் பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த பகுதியாக பொள்ளாச்சி மாறியுள்ளது. நேற்றுமுன்தினம் காலை முதல் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியம், 3:30 மணி முதல் இடைவிடாமல் மழை தொடர்ந்து பெய்தது. தொடர்ந்து இரவு முழுவதும் பெய்த மழையால் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
பொள்ளாச்சியில் 124 மி.மீ., மழை
சோலையாறு பகுதியில் 10 மில்லிமீட்டரும், பரம்பிக்குளத்தில் 38, ஆழியாறு அணைப்பகுதியில் 8மில்லி மீட்டர், அமராவதியில் 22மில்லிமீட்டர், பொள்ளாச்சியில்124 மில்லி மீட்டர், வால்பாறையில்18 மில்லி மீட்டர், மழையளவு பதிவாகியுள்ளது.
பெரியாறு - வைகை
தென்மாவட்டங்களை பொறுத்தவரை தேனியில் சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நள்ளிரவு 12.30மணிக்கு மேல் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர்மழையால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.90 அடியாக உயர்ந்துள்ளது.
நீங்கும் குடிநீர் பஞ்சம்
வைகை அணையின் நீர்மட்டம் 40 அடியை எட்டியுள்ளது. 682 கன அடிதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கோடைக்காலத்தில் நீண்ட காலத்துக்கு பிறகு அதிகளவு தண்ணீர் வரத்து உள்ளது. கோடையில் இம்முறை குடிநீர் பஞ்சத்துக்கு வாய்ப்பே இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.