ஆங்கிலேயருக்கு எதிராக வீரச்சமர்- துரோகத்தில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்!
சென்னை: தென் தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சி சீமையில் கி.பி.1760-ம் ஆண்டு ஜனவரி 3-ல் ஜக வீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். ஊமைத்துரை என்ற தனபால்குமாரசாமி, துரைசிங்கம் ஆகிய சகோதரர்களும் தங்கையர் இருவரும் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் பிறந்தவர்கள்.
பாஞ்சாலங்குறிச்சியில் 47-வது மன்னராக வீரபாண்டிய கட்டபொம்மன் அரியனை ஏறினார். அப்போது இந்த நிலம் பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. பாஞ்சாலங்குறிச்சி பாளையத்துக்கு உட்பட்டதாக 96 கிராமங்கள் இருந்தன.
ஆங்கிலேயர் ஊடுருவலுக்கு முன்னதாக ஆர்க்காடு நவாபிடம் பாளையக்காரர்கள் வரி செலுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தர் ஆர்க்காடு நவாப். இதற்கு எதிராக பாளையக்காரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். வீரன் அழகுமுத்துகோன், புலித்தேவர் பின்னர் கான்சாகிப் மருதநாயகம் உள்ளிட்டோர் ஆங்கிலேயருக்கு எதிராக தொடக்க காலங்களில் யுத்தம் நடத்தி வீர மரணம் அடைந்தனர்.

2-வது படை வரிசையில்தான் ராணி வேலுநாச்சியார், அவர்தம் தளபதியார் மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், விருப்பாட்சி கோபால் நாயக்கர் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர். ஆங்கிலேயருக்கு எதிராக எத்தனையோ வீரம் செறிந்த யுத்தங்களை வட இந்திய விடுதலை கிளர்ச்சிகளுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே நிகழ்த்தியது தமிழர் நிலம்.
பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேய தளபதி ஆலன்துரையிடம் வரி கட்ட மறுத்தார். இதன்பின்னர் ஜாக்சன்துரையை களமிறக்கியது ஆங்கிலேயப் படை. ஆரம்பத்தில் ஜாக்சன் துரையுடன் நட்புறவைத்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடினார். அதனால் ஜாக்சன் துரை அழைத்த இடத்துக்கெல்லாம் அமைதியாக சென்றார். கடைசியாக ராமநாதபுரம் அரண்மையில் ஜாக்சன் துரையை வீரபாண்டியன் தமது சகோதரர்களுடன் சந்தித்தார். ஆனால் ஜாக்சன் துரையோ, வீரபாண்டிய கட்டபொம்மனை கைது செய்ய உத்தரவிட இருதரப்புக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. இதில் வீரபாண்டிய கட்டபொம்மன் சகோதரர்களுடன் தப்பினார்.
இதன் பின்னர் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் பானர்மேன் ஆங்கிலேய படை யுத்தம் நடத்தியது. இந்த யுத்தத்தில் ஆங்கிலேய தளபதிகள் கர்னல் காலின்ஸ், டக்ளஸ், டார்மிக்ஸ், பிளாக்கி, கன்னர் பின்னி என பலரது தலைகளும் உருண்டன. இவர்களில் சிலரது கல்லறைகள் இன்றும் ஒட்டப்பிடாரம் அருகே வரலாற்று சாட்சியங்களாக இருக்கின்றன. இந்த யுத்த காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதி தானதிபதி ஆங்கிலேயரிடம் சிக்கி தூக்கிலிடப்பட்டார். ஆனாலும் வீரபாண்டிய கட்டபொம்மனும் அவரது சகோதரர்களும் அடைக்கலம் தேடி தமிழ் குறுநில மன்னர்களின் அரண்மனைகளை தட்டினர். அப்படியாக திறந்த கதவு ஒன்று துரோகத்தை நிகழ்த்தியது.. புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அரண்மனையில் ஆங்கிலேயர் படையால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கி.பி. 1799-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி கயத்தாறு என்ற இடத்தில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பின்னர் அவரது சகோதரர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் மாவீரர்கள் மருதிருவரும் அவர்தம் சாம்ராஜ்ஜியமும் ஆங்கிலேயரால் தகர்க்கப்பட்டதும் வரலாறு!
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட புளியமரம் இருந்த இடத்தில் அவருக்கு கம்பீரமான சிலை எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த இடத்தை விலை கொடுத்து வாங்கி சொந்த செலவில் சிலை வைத்து தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தவர் கட்டபொம்மனுக்கு திரைவடிவில் உயிர் கொடுத்த மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.












Click it and Unblock the Notifications