கிராமம் சார்ந்த தொழில்களுக்கு புது சலுகைககள் - மத்திய அரசு முடிவு
டெல்லி: நாட்டின் வேலையின்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த மேலும் அதிக நிதிச் சலுகைகளை அறிவிக்கவிருக்கிறது இந்திய அரசு.
இதன் ஒரு பகுதியாக நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள வளங்களை முழுமையாக பயன்படுத்துவதற்கான உதவிகளை அறிவிக்கப் போவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் தற்காலிகமாக நிதித்துறைக்கு பொறுப்பு வகிப்பவருமான பிரணாப்குமார் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
உலகப் பொருளாதார மந்தம் இந்தியப் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் அபாயம் நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதமாக இருந்தது. பிறநாடுகளே அசந்து போகிற அளவுக்கு இருந்தது அந்த வளர்ச்சி விகிதம். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த ஆண்டு 7 சதவிகிதம் அளவுக்காவது நமது வளர்ச்சி இருக்குமா தெரியவில்லை.
இதைத் தவிர்க்க மேலும் புதிய நிதிச் சலுகைகளை அளிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
இந்தியப் பொருளாதாரம் என்பது கிராமங்களைச் சார்ந்தே உள்ளது. இன்றும் 70 சதவிகிதம் கிராமப் பொருளாதாரமாகத்தான் உள்ளது. எனவே அந்த கிராமங்கள் சார்ந்த தொழில்களில் கவனம் செலுத்தப்போகிறோம்.
பன்னாட்டு நிதி அமைப்புகள், இந்தியாவின் கிராமங்களில் அதிக முதலீடு செய்வதை வரவேற்கிறோம். கிராமப்புற உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு அதிக சலுகைகளை அறிவிக்கும் திட்டமுள்ளது, என்றார் முகர்ஜி.
வரும் பிப்ரவரி 16-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறார் பிரணாப் முகர்ஜி. இந்த நிலையில் அவரது இந்த அறிவிப்பு, விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு அதிக ஊக்கமளிக்கத் திட்டமிட்டுள்ளதைக் காட்டுகிறது. ஏற்கெனவே 3 கட்டமாக ரூ.4 லட்சம் கோடிக்கு நிதிச் சலுகைகளை அறிவித்துள்ளது இந்திய அரசு. இப்போது 4-வது கட்டமாக விவசாயத் துறைக்கும், கிராமங்கள் சார்ந்த தொழில்களுக்கும் புதிய சலுகைகள் அளிக்கப்படுகிறது.
எப்போதோ செய்திருக்க வேண்டியது... இப்போதுதான் அதுகுறித்து யோசிக்க துவங்கியிருக்கிறார்கள். தாமதமாக செயல்படுத்தினாலும், கிராமங்கள் வளம்பெறுவதே நாட்டுக்கு பாதுகாப்பானது!












Click it and Unblock the Notifications