தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் சாலை மறியல்.. 4 மணி நேரம் முடங்கிய போக்குவரத்து
ஈரோடு காளிங்கராயன் கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் 4 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு: ஈரோட்டு மாவட்டம் காளிங்கராயன் கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரி விவசாயிகள் 4 மணி நேரமாக தொடர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து, காளிங்கராயன் கால்வாய் வழியாக விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்தப் பகுதியில் மஞ்சள் விவசாயம் அதிகம். இதற்காக வழக்கமாக 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை வெறும் 28 நாட்கள் மட்டுமே கால்வாயில் இருந்து நீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. காய்ந்த பயிரை காப்பாற்ற தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்காததால் இன்று விவசாயிகள் ஈரோடு-கரூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒத்தக்கடை சாலைபுதூர், வெங்கமேடு உள்ளிட்ட சாலைகளில் குறுக்கே விவசாயிகள் டிராக்டர்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் தொடர்ந்து ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சாலை மறியல் நடந்தும் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
பயிரை காப்பாற்ற உடனே 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாகும்.
கடந்த வாரம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் உள்ள கரட்டடிப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் தண்ணீர் இல்லாமல் மஞ்சள் பயிர்கள் கருகியதைக் கண்டு, அதிர்ச்சியில் பூச்சிக் கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.