For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேளாண்மை சட்டத்தை திரும்பப் பெறுக-ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு வேளாண்மை மன்றச் சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு முதல்வர் கருணாநிதியை மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு வேளாண்மை மன்றச் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டபோது எதிர்க்கட்சிகளின் சார்பிலோ, தோழமைக் கட்சிகளின் சார்பிலோ யாரும் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்ற அளவில் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார் முதல்வர் கருணாநிதி.

அந்த அறிக்கையில் சிறிதளவும் உண்மை இல்லை என்று தெரிவித்து தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டத்தை கைவிட வேண்டும் என்று அதிமுக சார்பில் பேரவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி மறுநாள் நான் அறிக்கை ஒன்றை வெளியிட்டேன்.

என்னுடைய அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக, அதிமுகவின் சார்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டதை நான் மறுக்கவில்லை என்று கருணாநிதி கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் 16ம் தேதி அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கையில், தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச்சட்டம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட போது யாரும் எதிர்ப்பு தெரிவித்து பேசவில்லை. சட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட பிறகுதான் அதனை ரத்து செய்ய வேண்டும் என்கின்றனர் என்று மீண்டும் கருணாநிதி கூறியிருக்கிறார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செ.ம.வேலுசாமி, பி.கே. சேகர்பாபு, எல்.ரவிச்சந்திரன், ஆகியோரில் ஒருவர் தமிழ்நாடு வேளாண் மன்றச்சட்ட முன் வடிவிற்கான திருத்தத்தை முன்மொழியலாம் என்பதில் தொடங்கி, தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச்சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட வேண்டும் என்ற வேளாண்மைத்துறை அமைச்சரின் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்று பேரவைத்தலைவர் அறிவித்தது வரை உள்ள 21.7.2009 நாளைய இரண்டு பக்க தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளை முழுவதுமாக கருணாநிதி படித்துப் பார்த்தால் தான் அதில் உள்ள உண்மை நிலை தெரியவரும்.

வேறு எங்குமே இல்லாத ஒரு சட்டத்தை இங்கே கொண்டு வருவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

எனவே இந்த சட்ட முன் வடிவு தேவையற்றது என்று கூறி, இதனைக் கைவிட வேண்டுமென்று, அதாவது ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் செ.ம. வேலுசாமி தெளிவாக எடுத்துரைத்து இருப்பது தெரியவரும்.

இதிலிருந்து மேற்படி சட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்ட போது அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டிருக்கிறது என்பதை அறிவார்ந்த மக்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

மேற்படி சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு முதல்வர் கருணாநிதியை மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X