10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?
மாதம் பிறந்தாலே சம்பளத்தில் பிஎஃப் (PF) பணம் பிடிக்கிறாங்களே என்று கவலைப்படும் பெரும்பாலான ஊழியர்களுக்கு, இதல் ஒரு ரகசியம் ஒளிந்துள்ளது என்பது பலருக்கும் தெரியாது.
நீங்கள் ஒவ்வொரு மாதமும் பிஎப் தொகை செலுத்தும் இபிஎஃப் (EPF) கணக்கு மூலமாகவே, எவ்விதமான கூடுதல் தொகையும் இல்லாமல், ஒரு பைசா கூட பிரீமியம் செலுத்தாமல் 7 லட்சம் ரூபாய் வரை இலவச ஆயுள் காப்பீடு (Life Insurance) பெற முடியும் என்பது பெரும்பாலான ஊழியர்களுக்குத் தெரிவதில்லை.

மத்திய அரசு வழங்கும் இந்த மிக முக்கியச் பாதுகாப்புத் திட்டம் குறித்தும், இதனைப் பெற நீங்கள் செய்ய வேண்டிய அந்த 2 நிமிட வேலை என்ன என்பது குறித்தும் இப்போது பார்ப்போம்.
இலவச காப்பீட்டுத் திட்டம்
மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் பெயர் 'ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம்' (EDLI - Employees' Deposit Linked Insurance Scheme) ஆகும்.
இபிஎஃப் கணக்கு வைத்துள்ள அனைத்துத் தனியார் துறை ஊழியர்களுக்கும் மத்திய அரசின் இந்த காப்பீடு முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது. ஒரு ஊழியர் பணியில் இருக்கும் காலத்தில் எதிர்பாராத விதமாக மரணமடைந்தால், அவருடைய குடும்பத்தினருக்கு அல்லது நியமிக்கப்பட்ட வாரிசுக்கு (Nominee) இந்த இன்சூரன்ஸ் தொகை மொத்தமாக வழங்கப்படும்.
இதற்காக ஊழியர்கள் தனியாக எந்தவொரு காப்பீட்டுப் பாலிசியையும் வாங்க வேண்டியதில்லை; எவ்வித மருத்துவப் பரிசோதனைகளும் (Medical Tests) செய்யத் தேவையில்லை. ஊழியரின் பிஎஃப் கணக்குச் செயல்பாட்டில் இருக்கும் வரை இந்த இன்சூரன்ஸ் பாதுகாப்பும் தானாகவே தொடரும்.
சம்பளப் பிடித்த கணக்கீட்டு
இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்காக ஊழியர்களின் சம்பளத்திலிருந்து கூடுதலாக பணம் எதுவும் பிடிக்கப்படுவதில்லை. உங்களின் அடிப்படைச் சம்பளத்திலிருந்து 12 சதவீதம் நேரடியாகப் பிஎஃப் (EPF) சேமிப்பிற்குச் செல்கிறது.
இதே கணக்கிற்கு நிறுவனத்தின் சார்பாக 12 சதவீதம் வரவு வைக்கப்படும், இதில் 3.67 சதவீதம் பிஎஃப் கணக்கிற்கும், 8.33 சதவீதம் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS) பிரிக்கப்படுகிறது. எஞ்சிய 0.5 சதவீதப் பணத்தை (அதிகபட்சம் 75 ரூபாய்) நிறுவனங்கள் மட்டுமே இந்த இடிஎல்ஐ (EDLI) காப்பீட்டு நிதிக்கு வழங்குகின்றன. ஆனால் இடிஎல்ஐ (EDLI) காப்பீட்டு நிதிக்கு செல்லும் தொகை யாருக்கும் தெரிவது கிடையாது.
7 லட்சம் எப்படி?
ஒரு ஊழியர் இறக்க நேரிட்டால், அவரது கடைசி 12 மாத காலச் சராசரி அடிப்படைச் சம்பளத்தை 35 ஆல் பெருக்கி வரும் தொகை அல்லது அதிகபட்சமாக 5.25 லட்சம் ரூபாய் அளிக்கப்படும், அதனுடன் அவரது பிஎஃப் கணக்கில் இருக்கும் சராசரி இருப்பில் 50 சதவீத போனஸ் தொகை வழங்கப்படும் இதில் அதிகபட்சமாக 1.75 லட்சம் ரூபாய் சேர்த்து மொத்தம் 7 லட்சம் ரூபாய் வரை நாமினிக்கு வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக 2.5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு உறுதியாகக் கிடைக்கும். சமீபத்தில் மத்திய அறசு செய்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாத திருத்தங்களின்படி, பிஎஃப் கணக்கில் 50,000 ரூபாய்க்குக் குறைவாக இருப்பு இருந்தாலும் குறைந்தபட்சமாக 50,000 ரூபாய் காப்பீட்டுத் தொகை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2 நிமிட வேலை!
இந்த இன்சூரன்ஸ் பணம் உங்களின் மறைவிற்குப் பிறகு குடும்பத்தினரைச் சுலபமாகச் சென்றடைய நீங்கள் உடனே செய்ய வேண்டியது என்னவென்றால்..?
உங்களின் இபிஎஃப்ஓ (EPFO) கணக்கில் 'இ-நாமினேஷன்' (e-Nomination) விவரங்களை ஆன்லைனில் அப்டேட் செய்வது மட்டும்தான். உங்களின் யுஏஎன் (UAN) எண்ணைப் பயன்படுத்தி வெறும் 2 நிமிடங்களில் வாரிசுதாரரின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிடலாம்.
வாரிசுதாரர் விவரம் துல்லியமாக இருந்தால் மட்டுமே, பின்னாட்களில் குடும்பத்தினர் பல வாரங்கள் அலைவதைத் தடுத்து, படிவம் 5 ஐஎஃப் (Form 5 IF), இறப்புச் சான்றிதழ் மற்றும் வங்கி விவரங்களைச் சமர்ப்பித்து இந்த 7 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற முடியும்.
எனவே, இன்றே உங்களின் நாமினி விவரங்களை புதுப்பித்து, உங்கள் யுஏஎன் எண்ணைக் குடும்பத்தில் உள்ள ஒருவரிடமாவது பகிர்ந்துக்கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications