ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள்
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று வரலாறு காணாத அளவுக்குச் சரிந்துள்ளன. ரூபாய் மதிப்பு சரிவு, மத்திய கிழக்கு மோதல் என பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தைகள் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. இதன் மூலம் இன்றைய தினம் ஒரே நாளில் சுமார் ₹10 லட்சம் கோடி முதலீடு துடைத்தெறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான ஒரு சூழல் நிலவுகிறது. இந்த பதற்றம் மத்திய கிழக்கைத் தாண்டி உலகெங்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகெங்கும் உள்ள பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. அமெரிக்கப் பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை மட்டும் கிட்டத்தட்ட 2% வரை சரிந்தது.

10 லட்சம் கோடி
இது இந்தியப் பங்குச்சந்தையிலும் நேரடியாக எதிரொலித்தது. இன்று திங்கள்கிழமை இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 1,636 புள்ளிகள் குறைந்து 71,948 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல நிஃப்டி50, 488 புள்ளிகள் சரிந்து 22,331 என்ற நிலைக்குச் சென்றது. இதன் மூலம் ஒரே நாளில், சுமார் ₹10 லட்சம் கோடி முதலீடு துடைத்தெறியப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் வரலாற்றுச் சரிவு, ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணி கட்டுப்பாடுகள் ஆகியவை இந்த சரிவுக்குப் பிரதான காரணமாக இருக்கிறது. மேலும், போர் சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் ரிஸ்க் எடுப்பதை விரும்பவில்லை. இதனால் மற்ற சந்தைகளில் இருக்கும் தங்கள் முதலீடுகளை விற்றுவிட்டு, அமெரிக்காவில் முதலீடு செய்யக் கவனம் செலுத்துகிறார்கள்.. இதுவும் சரிவுக்குப் பிரதான காரணமாக இருந்துள்ளது.
கடும் சரிவு
இன்றைய தினம் ஒரு பங்கு உயர்ந்தது என்றால் 6 பங்குகள் வரை சரிந்துள்ளன. வங்கி மற்றும் நிதி சார்ந்த பங்குகளின் சரிவே இதற்குப் பிரதான காரணமாக அமைந்தன. ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்.பி.ஐ போன்ற வங்கிகளின் பங்குகள் 5% வரை சரிந்தன. அந்நிய செலாவணி தொடர்பாக ரிசர்வ் வங்கி சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அதுவே நிதி பங்குகள் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.
அதேபோல மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதலும் நிலைமையை மோசமாக்கி வருகிறது. மத்திய கிழக்கு பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உச்சத்திற்குப் போய் வருகிறது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3%க்கு மேல் உயர்ந்து ஒரு பேரல் $115ஐ தாண்டியது. ஐந்தாவது வாரமாக நீடிக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல், விநியோக சங்கிலியைப் பாதித்து, சரக்கு போக்குவரத்து அபாயங்களை அதிகரித்துள்ளது. இதுவே நிலைமையை மோசமாக மாற்றியுள்ளது.
ரூபாய் மதிப்பு
மேலும், ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த மாபெரும் சரிவுக்கு அதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முதல் முறையாக 95ஐ கடந்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு 95.22 என்று அளவை ரூபாய் எட்டியது. மேலும், 10 ஆண்டுக் கால அரசுப் பத்திரத்தின் வட்டி விகிதம் 7%ஐ தாண்டியுள்ளது. இது சந்தை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இதுபோல பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தனது முதலீடுகளை இந்தியாவில் இருந்து எடுத்து வருகிறார்கள். அதாவது இந்திய நிறுவனங்களில் செய்த முதலீட்டை விற்றுவிட்டு, அமெரிக்காவில் கவனம் செலுத்துகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ₹4,367 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றதாகத் தெரிகிறது. இந்த மார்ச் மாதம் முழுக்கவே இதுபோல பங்குகளை விற்றே வந்துள்ளனர். இதுவும் பங்குகள் சரிய மற்றொரு முக்கிய காரணமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications