ஆதவ் அர்ஜுனா “இனிமேல் நடக்கவே நடக்காது” என்றாரே.. மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமானம்!
சென்னை: இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் நடந்ததை ஏதோ தெரியாமல் நடந்த தவறு என்று சப்பைக்கட்டு கட்டியவர்கள், இன்று அமைச்சரவை விரிவாக்கத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வது இடத்திற்குத் தள்ளி அவமானப்படுத்தியுள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தைப் போர்க்களமாக மாறியிருக்கிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்ற முதல் நாளே, "தமிழ்த்தாய் வாழ்த்து" விவகாரம் மிகப் பெரிய புயலைக் கிளப்பியது. அன்று ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த பதவியேற்பு விழாவில், தமிழகத்தின் மரபுகளை உடைத்து வந்தே மாதரம் முதலாவதாகவும், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது.

"இது ஆளுநர் மாளிகை கொடுத்த புரோட்டோகால், எனினும் இனிமேல் இதுபோல நடக்காது" என்று தவெக-வின் முக்கிய முகமும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா கூறினார். ஆனால், இன்று நடந்த அமைச்சரவை விரிவாக்க விழாவிலும் அதே சம்பவம்'ரிப்பீட்' ஆகிய்ள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எழுந்த கடும் விமர்சனம்
முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சர்கள் முதன்முதலாகப் பதவி ஏற்கும் விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதும் விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளே கொதித்தெழுந்தன. திமுக மற்றும் அதிமுக ஆகிய எதிர்க்கட்சிகள், "தவெகவின் தமிழ் பற்று இவ்வளவுதானா? ஆளுநருக்கும் மத்திய அரசுக்கும் அஞ்சி நடுங்குகிறார்களா?" என்று காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தன.
தவெக தரப்பு கொடுத்த விளக்கம்
"இது ஆளுநர் மாளிகையின் (Raj Bhavan) நேரடி வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட புரோட்டோகால். தமிழ்நாட்டின் மரபுக்கு இது உகந்தது அல்ல என்றாலும், அரசு விழாவின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. இனிவரும் நிகழ்வுகளில் தமிழகத்தின் பாரம்பரிய முறைப்படி தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்படும்." என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றார்.
இன்று நடந்தது என்ன? மீண்டும் அதே நிகழ்வு
இன்று அமைச்சரவை விரிவாக்க விழா நடைபெற்றது. இதில் 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்த நிகழ்விலும் ஆரம்பத்திலும் முடிவிலும் முதலாவதாக: வந்தே மாதரம், இரண்டாவதாக: ஜன கண மன, மூன்றாவதாக: தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அன்றாவது "கூட்டம் அதிகம், முதல் முறை பதவியேற்பு, ஆளுநரின் கெடுபிடி" என்று காரணங்களை அடுக்க முடிந்தது. ஆனால், இன்று மிக எளிமையாக, முறைப்படி நடந்த உள்வட்டார அரசு விழாவிலும் அதே ஃபார்முலாதான் பின்பற்றப்பட்டது.
தமிழக அரசு நடத்தும் எந்தவொரு அதிகாரப்பூர்வ விழாவாக இருந்தாலும், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் நிறைவு பெற வேண்டும் என்பதுதான் பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் மரபு. அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையும் தவெக அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.
3 கேள்விகள்
மத்திய அரசு மற்றும் ஆளுநருடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல், இணக்கமான அரசியல் செய்ய விஜய் விரும்புகிறார் என்பதற்கான அப்பட்டமான சிக்னலா இது என்ற கேள்வி எழுந்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படிதான் இது நடக்கிறது என்றால், அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் இதே சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழ் உணர்வை முதன்மையாகப் பேசும் ஒரு கட்சி, மாநில மரபை விட்டுக்கொடுப்பது ஏன் என்ற விமர்சனம் எழுகிறது.
"இனி இப்படி நடக்காது" என்று பகிரங்கமாக அறிவித்த ஆதவ் அர்ஜுனாவின் வார்த்தைக்கு, தவெக அரசுக்குள் எந்தளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்ற உட்கட்சி விவாதமும் கிளம்பியுள்ளது.
திமுக, அதிமுக பாய்ச்சல்
இந்தத் தொடர் சம்பவத்தை திமுக மற்றும் அதிமுக ஐடி விங்குகள் சமூக ஊடகங்களில் மிகத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளன. "அன்று ஏதோ தெரியாமல் நடந்துவிட்டது என்று சப்பைக்கட்டு கட்டியவர்கள், இன்று தெரிந்தே தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்தியுள்ளனர். இதுதான் தவெக சொல்லும் தமிழ் தேசியமா?" என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தவெகவின் இமேஜ் அடிவாங்கும்
விஜய்யின் தவெக அரசு, நிர்வாக ரீதியாக டெல்லி மற்றும் ஆளுநர் மாளிகையுடன் இணக்கமாகச் செல்ல நினைப்பது ஒருபுறம் இருந்தாலும், தமிழ்நாட்டின் பிரதான அடையாளமாக இருக்கும் 'தமிழ்த்தாய் வாழ்த்து' விவகாரத்தில் தொடர்ந்து சறுக்குவது அவர்களின் இமேஜைப் பாதிக்கக்கூடும்.
"அடுத்த முறை சரி செய்யப்படும்" என்ற சமாதானங்கள் இனி செல்லுபடியாகாது என்பதை இன்றைய அமைச்சரவை விரிவாக்க நிகழ்வு உணர்த்தியுள்ளது. முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு முற்றுப்புள்ளி வைப்பாரா அல்லது இதே 'மத்திய அரசின் புரோட்டோகால்' முறைதான் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications