நிதி அமைச்சராக மரிய வில்சன் நியமனம்.. செங்கோட்டையன் இலாகா மாற்றம்.. முதல்வர் விஜய் அதிரடி!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் ட்விஸ்ட்டாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசில் இன்று மிக முக்கிய இலாகா மாற்றம் நடந்துள்ளது. புதிய அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, நிதி அமைச்சராக ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ மரிய வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நிதி அமைச்சராக இருந்த கே.ஏ. செங்கோட்டையனுக்கு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மாற்றி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி இலாகா மாற்றம் கோட்டை வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

மரிய வில்சனுக்கு நிதித்துறை
இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில் சென்னைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டு, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ மரிய வில்சனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது பலரையும் கவனிக்க வைத்தது. ஆனால், பதவி ஏற்ற சிறிது நேரத்திலேயே அவருக்கு மாநிலத்தின் முதுகெலும்பாக விளங்கும் நிதித்துறை ஒதுக்கப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவும், ஜேப்பியார் மருமகனுமான மரிய வில்சனுக்கு நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையை ஒதுக்கியுள்ளார் முதலமைச்சர் விஜய்.
நிதி அமைச்சர்
கல்வி மற்றும் தொழில் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட மரிய வில்சன், நிதி மேலாண்மையைச் சிறப்பாகக் கையாள்வார் என்ற நம்பிக்கையில் தமிழக முதலமைச்சர் விஜய் இந்த அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வடசென்னை மற்றும் சென்னை மத்தியப் பகுதிக்கு மிக முக்கிய அதிகாரத்தை இதன் மூலம் முதலமைச்சர் விஜய் வழங்கி இருக்கிறார்.
செங்கோட்டையனுக்கு வருவாய்த்துறை
தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற மே 10 ஆம் தேதி, கட்சியின் உயர்மட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும் 10 முறை சட்டமன்ற உறுப்பினருமான சீனியர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு நிதித்துறை வழங்கப்பட்டது. தற்போது அவரிடமிருந்து நிதித்துறை திரும்பப் பெறப்பட்டு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தின் பின்னணியில் இருவேறு அரசியல் பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. 78 வயதான மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு, பட்ஜெட் தயாரிப்பு மற்றும் நிதி நெருக்கடிகளைச் சமாளிக்கும் நிதித்துறையின் அதீத பணிச்சுமையைக் குறைத்து, மக்கள் தொடர்புள்ள வருவாய்த்துறை வழங்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தின் ஒவ்வொரு கிராமப்புறப் பகுதிகளையும், அடிமட்ட நிர்வாக அமைப்புகளையும் விரல் நுனியில் வைத்துள்ள செங்கோட்டையன், வருவாய்த்துறையை மிகச் சிறப்பாக வழிநடத்த முடியும் என விஜய் கணக்கு போட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
புது மாடல்
நிதி போன்ற முக்கியத் துறையை மரிய வில்சன் போன்ற புதிய, இளம், கார்ப்பரேட் மேலாண்மைத் திறன் கொண்டவரிடம் ஒப்படைத்து, நிர்வாகத்தில் புதுமையைப் புகுத்த விஜய் விரும்புகிறாராம்.
அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையனுக்கு வருவாய்த் துறை, நிர்வாக உத்தி, பொருளாதார மேலாண்மையில் திறமை மிக்க மரிய வில்சனுக்கு நிதித்துறை என விஜய் பிரித்துக் கொடுத்திருப்பது ஒரு கார்ப்பரேட் ஸ்டைல் அட்மினிஸ்ட்ரேஷன் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட்டைத் தயாரிக்கும் மிகப் பெரிய பொறுப்பு இப்போது நேரடியாகப் புதிய நிதி அமைச்சர் மரிய வில்சன் தோள்களில் விழுந்துள்ளது.
மாநிலத்தின் நிதி நிலைமை, கடன் சுமைகள், மற்றும் தவெக தேர்தல் நேரத்தில் அறிவித்த மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஆதாரங்களை உருவாக்குவது எனப் புதிய நிதி அமைச்சர் மரிய வில்சன் முன் பல சவால்கள் அணிவகுத்து நிற்கின்றன.













Click it and Unblock the Notifications