ஆட்சிக்கே பெரிய ஆபத்து.. விஜய் டேபிளுக்கு போன ரிப்போர்ட்! வேலுமணியை வேண்டாம் என்றது இதனால் தானா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு காங்கிரஸ் - தவெகவைச் சேர்ந்த 23 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றிருக்கின்றனர். ஆனால் அதிமுக எடப்பாடி அதிருப்தி அணியை சேர்ந்த சிவி சண்முகம் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இரண்டு காரணங்களால் தான் விஜய் வேலுமணி அணிக்கு அமைச்சர் பதவியை வழங்கவில்லை என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். அந்த காரணங்கள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்..
தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக அதிகமாக பேசப்பட்ட விஷயம் என்னவென்றால், விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் அ.தி.மு.க. அதிருப்தி அணிக்கு இடம் கிடைக்குமா என்பதுதான். குறிப்பாக எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தனர்.

அதன் பிறகு, அவர்களில் சிலர் அமைச்சர்களாகலாம் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. ஆனால் இன்று வெளியான அமைச்சரவை பட்டியலில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவரின் பெயர்கூட இடம்பெறவில்லை.
விஜய் அரசு
இதனால் அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, "ஆதரவு அளித்த பிறகும் அதிமுக அதிருப்தி அணிக்கு ஏன் அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்படவில்லை?" என்ற கேள்விதான் தற்போது அதிகமாக கேட்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அமைச்சரவையில் இடம் வழங்கப்படாததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
அமைச்சரவை விரிவாக்கம்
தமிழகத்தில் தவெக அரசு அமைந்தபோது முழுமையான பெரும்பான்மை இல்லாத சூழல் இருந்தது. அப்போது காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதேசமயம், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையுடன் மோதலில் இருந்த எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் அணியைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்களும் விஜய் அரசுக்கு ஆதரவு அளித்தனர். இதனால், அமைச்சரவை விரிவாக்கத்தில் அந்த அணிக்கு குறைந்தபட்சம் 4 அல்லது 5 இடங்கள் கிடைக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது.
தகுதி நீக்கம்
ஆனால் கடைசி நேரத்தில் நிலைமை மாறிவிட்டதாக கூறப்படுகிறது. முதல் காரணம் தகுதி நீக்கம் என்ற சிக்கல் தான். அதாவது, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கிய பி-பார்மில் கையெழுத்திட்டவர் எடப்பாடி பழனிசாமிதான்.
அதிமுக அதிருப்தி அணி
அதேபோல், சட்டப்பேரவையில் அதிமுக கொறடாவாக நியமிக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி, த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அந்த உத்தரவை மீறி விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதுதான் தற்போது பெரிய சட்ட சிக்கலாக மாறியுள்ளது.
விஜய் தரப்பு
கொறடா உத்தரவை மீறியதால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் சபாநாயகர் மற்றும் நீதிமன்றம் வரை செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தகுதி நீக்க ஆபத்தில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அது அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்ற ஆலோசனை விஜய் தரப்புக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "பின்னர் நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தால், அமைச்சரவையே சிக்கலில் மாட்டிக்கொள்ளும்" என்ற அச்சமும் இருந்ததாக கூறப்படுகிறது.
கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு
இரண்டாவது முக்கிய காரணம் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு. தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள், அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்ப்பதை விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், "அ.தி.மு.க.வினரை அமைச்சரவையில் சேர்த்தால் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்" என்று வெளிப்படையாகவே எச்சரித்தனர்.
அதிமுக அதிருப்தி அணி
அதேபோல், மற்ற கூட்டணி கட்சிகளும் மறைமுகமாக அதிருப்தியை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
இதனால், ஒருபுறம் அதிமுக அதிருப்தி அணியை சமாளிக்க வேண்டும்.. இன்னொரு பக்கம் கூட்டணி கட்சிகளின் ஆதரவையும் இழக்கக்கூடாது என்ற சிக்கலில் விஜய் தரப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இறுதியில், "அமைச்சரவை பதவி கொடுத்து புதிய பிரச்சனை உருவாக்க வேண்டாம்" என்ற முடிவுக்கே தவெக தலைமை வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி
இதன் காரணமாகவே இன்று பதவியேற்ற 23 அமைச்சர்களில் த.வெ.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக, விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சரவை இடம் வழங்கப்படவில்லை. இந்த முடிவு தற்போது அதிமுக அதிருப்தி அணிக்குள் புதிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், சில எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்பும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் உலாவுகின்றன.














Click it and Unblock the Notifications