தலைவலியாக மாறிய ஜோதிடர் ராதன்! விஜயை திரும்பி பார்க்க வைத்த.. சேரன் செங்குட்டுவன் கதை தெரியுமா?
சென்னை: முதல்வர் விஜய்யின் நிர்வாக முடிவுகள் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, முதலமைச்சரின் தனிப்பணி அதிகாரியாக - ஸ்பெஷல் பணி பிரிவின் கீழ் (OSD) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தனது தனிப்பட்ட ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட் வெற்றிவேலை, அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்பான OSD பதவியில் அமர்த்தியிருப்பது ஒரு நவீன கால அரசாங்கத்திற்கு அழகல்ல என்ற விமர்சனம் எழுந்துள்ளது. முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி (Special Officer - Political Wing) பதவி என்பது அரசியல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பை கவனிக்கும் முக்கிய பொறுப்பாக கருதப்படுகிறது. நிர்வாகம் என்பது கோள்களின் நகர்வுகளால் அல்ல, மாறாக கொள்கைகளின் முடிவுகளால் அமைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

இன்று தமிழ்நாடு சட்டசபையிலும் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. பல கட்சியினரும் முதல்வர் விஜயின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
சிதம்பரம் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பேசுகையில், ஜோதிடத்தை ஒரு நாடாளும் நபர் நம்பக்கூடாது என்பதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. அதற்கு ஒரு கதை சொல்கிறேன், பண்டைய சேர நாட்டில், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவனுக்குச் செங்குட்டுவன், இளங்கோ என இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவர் செங்குட்டுவன் வீரத்தில் சிறந்தவனாக வளர்ந்து வந்தார்.
ஒருநாள், அரண்மனைக்கு வந்த ஒரு ஜோதிடர், இரு இளவரசர்களையும் உற்றுப் பார்த்தார். பின்னர் மன்னனிடம், "அரசே, உங்கள் இளைய மகன் இளங்கோவின் முகத்தில் பேரரசர்க்குரிய லட்சணங்கள் தெரிகின்றன. வருங்காலத்தில் அவரே இந்த நாட்டை ஆளுவார்" என்று கணித்துக் கூறினார்.
மூத்த மகன் இருக்கும்போது தம்பிக்கு முடிசூட்டு விழா நடக்கும் என்ற ஜோதிடரின் பேச்சு, அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஆனால் கட்டம் சரியில்லை என்று ஜோதிடர் உறுதியாக இருந்தார். குறிப்பாக, தன் அண்ணன் செங்குட்டுவன் இதனால் மனவருத்தம் அடைவதை இளங்கோ கவனித்தார். அண்ணன் மேல் இருந்த பாசத்தாலும், முறைப்படி மூத்தவனே அரசாள வேண்டும் என்ற எண்ணத்தாலும் இளங்கோ ஒரு அதிரடி முடிவை எடுத்தார்.
"ஜோதிடர் சொன்னது பலிக்காது. என் அண்ணன் இருக்கும்போது நான் அரசாள மாட்டேன்," என்று கூறி, அங்கேயே தன் இளவரசர் பதவியைத் துறந்தார். அரண்மனை வாழ்வை விட்டு வெளியேறி, ஒரு மடத்தில் சேர்ந்து துறவியாக மாறினார். அவரே 'இளங்கோ அடிகள்' என்று அழைக்கப்பட்டார்.
தம்பியின் தியாகத்தால், செங்குட்டுவன் எந்தச் சிக்கலும் இன்றி சேர மன்னனாகப் பொறுப்பேற்றார். அவர்இமயம் வரை சென்று வெற்றி பெற்று, மிகப்பெரிய வீரனாகத் திகழ்ந்தான். அதே சமயம், துறவறம் பூண்ட இளங்கோ அடிகள், காலத்தால் அழியாத 'சிலப்பதிகாரம்' என்ற காவியத்தைப் படைத்தார். நாட்டை ஆளும் வாய்ப்பை இளங்கோ விட்டுக் கொடுத்தாலும், தமிழ் இலக்கிய உலகின் மன்னராக இன்றும் அவர் போற்றப்படுகிறார். அதே சமயம் ஜோதிடம் புரட்டு என்று இளங்கோவடிகளின் தியாகம் நிரூபித்தது, என்று கடுமையாக குறிப்பிட்டார். ஜோசியர் ஒருவரை அரசு பொறுப்பில் மக்கள் வரிப்பணத்தில் நியமித்ததை மக்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications