தங்க நகைகள் திருமணங்களுக்கு வாங்குவதை தவிர்க்க கோரிய மோடி! பெங்களூருவில் 50% சரிந்த தங்கம் விற்பனை
சென்னை: பிரதமர் மோடியின் தங்கம் மற்றும் எரிபொருள் நுகர்வு குறைப்பு வேண்டுகோளைப் பா.ஜனதாவினர் தீவிரமாக வழிமொழிந்து வருகின்றனர்.. இதன் எதிரொலியாகப் பெங்களூருவில் தங்கம், வெள்ளி விற்பனை பாதியாகக் குறைந்துள்ளதாகவும், பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டால் பெட்ரோல், டீசல் பெருமளவில் மிச்சமாவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.. நாட்டின் பொருளாதார நலன் சார்ந்த இந்த அதிரடி மாற்றங்களுக்குப் பாஜக தரப்பில் தற்போது பலத்த வரவேற்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது..
நாட்டின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தங்கம் வாங்குவதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்திருந்தார்.

மோடி விடுத்த வேண்டுகோள்
பொதுமக்கள் தங்களின் அவசியமில்லாத கூடுதல் தங்க நுகர்வைக் குறைத்துக் கொண்டால், அது நாட்டின் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.. உலக அளவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையைக் காரணம் காட்டி, திருமண விசேஷங்களுக்கு இன்னும் ஒரு வருஷத்துக்கு தங்கம் வாங்குவதைத் தற்காலிகமாக மக்கள் தவிர்க்க வேண்டும் என்று மோடி இவ்வாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த அறிவிப்பு, ஒரு அதிகாரப்பூர்வ உத்தரவோ அல்லது சட்டபூர்வமான தடையோ கிடையாது, இது முற்றிலும் ஒரு பொருளாதார வேண்டுகோள் மட்டுமே என்று அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன..
தங்கம் பயன்பாடு
உண்மையில் நம்முடைய இந்தியாவுக்கு தேவையான தங்கத்தை நாம் முழுமையாக வெளிநாடுகளில் இருந்துதான் காசு கொடுத்து வாங்குகிறோம்.. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அடுத்தபடியாக, இந்தியா அதிக அளவில் வெளிநாட்டுப் பணத்தைச் செலவழிப்பது இந்தத் தங்கத்தை இறக்குமதி செய்வதற்காகத்தான் என்பதை வணிக அமைச்சகத்தின் முந்தைய விபரங்கள் காட்டுகின்றன.
தங்கம் என்பது ஒரு அத்தியாவசியமற்ற நுகர்வுப் பொருள் என்ற போதிலும், பொதுமக்களின் அதிகப்படியான தேவையால் பெருமளவில் வெளிநாட்டுப் பணம் வெளியேறுவது நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.. இந்த வர்த்தக சவாலை சமநிலைப்படுத்த பொதுமக்கள் தங்களின் தங்க நுகர்வை தற்காலிகமாகக் குறைக்க வேண்டும் என்பதால்தான் இப்படியொரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தங்க நகை மோகம் குறைந்ததா
பிரதமர் மோடி விடுத்த பொருளாதார வேண்டுகோளை பாஜகவினரும் தீவிரமாக ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.. இந்நிலையில் அதுதொடர்பாக சில முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி பெங்களூருவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கும் மோகம் மக்கள் மத்தியில் சுமார் 50 சதவீதம் வரை குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.. அதேபோல், பொதுமக்கள் தங்களின் சொந்த வாகனங்களை பயன்படுத்துவதையும் குறைத்து கொண்டுள்ளார்களாம்.
50% தங்கம் வாங்குவது குறைவு?
அதற்கு பதிலாக பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதன் காரணமாக, ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கிலும் நாளொன்றுக்குச் சராசரியாக 150 முதல் 250 லிட்டர் வரை பெட்ரோல் மற்றும் டீசல் மிச்சமாவதாகக் கூறப்படும் இந்தத் தகவல்களுக்கு பாஜக தரப்பில் தற்போது பலத்த வரவேற்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது..
ஆனால், இது தொடர்பாக நகைக் கடைகளின் விற்பனையிலோ அல்லது தங்கம் தொடர்பான நிறுவனங்களின் பங்கு விலையிலோ உடனடி வீழ்ச்சியோ அல்லது மாற்றங்களோ ஏற்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வமான புள்ளிவிவர ஆதாரமும் இந்தச் செய்தி வெளியாகும் நேரம் வரை கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications