நள்ளிரவில் சத்தம், சுற்றும் ஆவிகள்! விஜய் பட ஷூட்டிங் நடந்த இடத்தில் சர்ச்சை! நிஜாம் காலத்து மர்மம்
ஹைதராபாத்: உலகின் மிக பெரிய சினிமா ஸ்டுடியோவாக இருக்கும் ராமோஜி ஃபில்ம் சிட்டியைச் சுற்றி ஒரு சர்ச்சை உலாவிக் கொண்டே இருக்கிறது. அதாவது சுமார் 2000 ஏக்கரில் பரவியுள்ள இந்த ராமோஜி பில்ம் சிட்டியில் பேய்கள் உலா வருவதாகச் சில காலமாகவே தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியாவில் திரைப்படங்கள் நிஜமாக உயிர் பெறுவதை நாம் உணரக்கூடிய ஓர் இடமென்றால், அது ராமோஜி ஃபில்ம் சிட்டிதான். ஹைதராபாத்தில் உள்ள இந்தப் பிரம்மாண்ட ஸ்டுடியோ, வெறும் சுற்றுலாத் தலமல்ல.. சினிமா, சாகசம், பொழுதுபோக்கு, மறக்க முடியாத அனுபவங்களுக்காகவே உருவாகும் இடம் இது. சுமார் 2,000 ஏக்கரில் விரிந்து, உலகின் மிகப் பெரிய திரைப்பட ஸ்டுடியோ வளாகமாகக் கின்னஸ் உலக சாதனை இதை அங்கீகரித்துள்ளது.

பேய் கதைகள்
என்ன தான் உலகின் மிகப் பெரிய ஸ்டுடியோ.. ரஜினி, கமல், அஜித், விஜய் என டாப் நட்சத்திரங்கள் நடித்திருந்த படங்கள் ஷூட் செய்யப்பட்டு இருந்தாலும்... இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருந்தாலும் கூட, இந்த இடத்தில் பேய் நடமாட்டம் இருப்பதாக ஒரு பேச்சு இருக்கத் தான் செய்கிறது. இது இந்த இடத்தின் சுவாரசியத்தைக் கூட்டவே செய்கிறது.
ராமோஜி ராவ் 1996இல் ஹாலிவுட் பாணியில் இந்த ஸ்டுடியோவை உருவாக்கினார். ஷூட்டிங் மட்டுமின்றி, ஆண்டுதோறும் இதைச் சுற்றிப் பார்க்கவே 15 லட்சம் பேர் இங்குச் செல்கிறார்கள். ஹைதராபாத்தின் முக்கியச் சுற்றுலா மையமாகத் திகழும் இங்குப் பல ஆண்டுகளாகவே இது பேய் நடமாட்டம் உள்ளதாகப் பேசப்படுகிறது.
என்ன காரணம்
அங்குள்ள மக்கள் சொல்லும் கதைகளின்படி, இப்போது ஃபில்ம் சிட்டி அமைந்துள்ள இடம் நிஜாம்கள் காலத்தில் ஒரு போர்க்களமாக இருந்தது. அங்குப் பல வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததாகவும், அவர்களின் ஆவிகள் அந்த இடத்தை விட்டு நீங்கவில்லை என்றும் நம்பப்படுகிறது. அவர்களின் ஆன்மா அங்குச் சுற்றி வருவதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக, விசித்திரமான சம்பவங்கள் இந்த வதந்திகளுக்கு வலுச் சேர்த்துள்ளன.
இரவில் லேட்டாக வேலை செய்யும் திரைப்படக் குழுவினர், காரணமின்றி விளக்குகள் அணைவதைப் பார்த்துள்ளனர்.. மேலும், செட்களில் தனியாக இருந்தபோது யாரோ தள்ளுவது போல் உணர்ந்ததாகவும் சிலர் கூறியுள்ளனர். அனைத்தும் பாதுகாப்பாக இருந்த நிலையிலும், சில ஷூட்டிங் சாதனங்கள் எதிர்பாராதவிதமாக விழுந்ததாகவும் சொல்கிறார்கள்.
ஹோட்டல் கதைகள்
அதேபோல அங்குள்ள ஹோட்டல்களில் இருந்தும் இதுபோல பல கதைகள் உள்ளன. விருந்தினர்கள் இல்லாத போதிலும் லாபியில் காலடி சத்தங்கள் கேட்டுள்ளது. கதவுகள் தானாகப் பூட்டிக் கொள்வது, யாரோ பேசுவது போன்ற சத்தம் திடீரென எழுத்துக்கள் கண்ணாடிகளில் தெரிவது என வினோதச் சம்பவங்கள் நடந்துள்ளன.
இருப்பினும், இது எல்லாமே செவி வழி செய்து தான். இதற்கு அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் இல்லை. எனவே, இது உண்மையாகவும் இருக்கலாம்.. அல்லது பயத்தில் இல்லாத ஒன்றை பார்த்ததாகவும் இருக்கலாம் என்கிறார்கள். பேய்க் கதைகள் பேசுபொருளாக இருந்தாலும், மக்கள் இங்கு வருவதற்கு உண்மையான காரணம், இதன் மாயாஜால அனுபவங்கள்தான்.
பிரம்மாண்டம்
ராமோஜி ஃபில்ம் சிட்டியில், இந்தியத் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான அற்புதமான செட்கள் உள்ளன. மெகா பட்ஜெட் பாகுபலி, சந்திரமுகி படங்களின் செட்கள் இங்கு தான் உள்ளன. விஜய்யின் ஜில்லா, லியோ, அஜித்தின் வலிமை, நேர்கொண்ட பார்வை என பல படங்கள் இங்கு எடுக்கப்பட்டவை தான்.! இந்த ஸ்டுடியோவை சுற்றிப் பார்க்க ஒவ்வொரு ஆண்டும் பலரும் வருகிறார்கள். இங்குள்ள சிறப்புப் பேருந்துகளில் அவர்கள் ஸ்டுடியோவை சுற்றிப் பார்க்கிறார்கள். அப்போது வழிகாட்டிகள் திரைப்படத் தயாரிப்பு சீக்ரெட்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
மேலும், இங்குள்ள நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் பொதுமக்களைக் கவரும் வகையில் உள்ளன. சாகச விரும்பிகளுக்கு, சஹாஸ் சாகசப் பூங்கா உள்ளது. இங்கு ஜிப்லைன், கயிறு ஏறுதல், தடைகள் தாண்டும் பயிற்சிகள், பஞ்சி ஜம்பிங் போன்ற பல அற்புதமான சவால்கள் காத்திருக்கின்றன. இது தவிர இயற்கை எழில் நிரம்பிய வண்ணத்துப்பூச்சி தோட்டங்கள், பறவைகள் பூங்காக்கள், பசுமை நிலப்பரப்புகள், சூழல் சுற்றுலா ஆகியவை அமைதியை அளிக்கின்றன.












Click it and Unblock the Notifications