காவிரி ஆற்றில் யானைகளுக்குள் சண்டை.. இடையில் சிக்கிய சென்னை பெண் உடல் நசுங்கி பலி! பதைபதைக்கும் வீடியோ
பெங்களூர்: கர்நாடக மாநிலம் குடகு துபாரே யானைகள் முகாம் அருகே காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த யானைகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது இரு யானைகளுக்குள் திடீரென ஏற்பட்ட சண்டையில் சிக்கி சென்னையை சேர்ந்த ஜிம்னு என்ற பெண் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண் ஜிம்னு. இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அவர்கள் துபாரே யானைகள் முகாமுக்கும் சென்றுள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள வளர்ப்பு யானைகள் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தன. பாகன்கள் உதவியுடன் யானைகள் குளிக்க வைக்கப்பட்டிருந்தன.

உடல் நசுங்கி சென்னை பெண் பலி
அப்போது இங்கு சுற்றுலா பயணிகள் பலரும் யானைகளை குளிப்பாட்டும் காட்சியை ஆற்றங்கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண் ஜிம்னுவும் கணவர் மற்றும் குழந்தையுடன் பார்த்து கொண்டிருந்துள்ளனர். அப்போது 'கஞ்சன்' மற்றும் 'மார்த்தாண்டா' என்ற இரண்டு யானைகளுக்கு இடையே திடீரென சண்டை உண்டானது.
யானைப்பாகன்கள் கட்டுப்படுத்த முயன்றும், 'கஞ்சன்' என்ற யானை 'மார்த்தாண்டா' மீது பாய்ந்து தாக்கியுள்ளது. இதில் சமநிலையை இழந்த 'மார்த்தாண்டா' கீழே விழுந்தபோது, அருகில் நின்ற ஜிம்னு யானையின் கீழ் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரு யானைகள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதியதில் அதற்கு இடையே சிக்கி ஜிம்னுபரிதாபமாக உயிரிழந்தார்.
அமைச்சர் விளக்கம்
அவரது கணவர் கைக்குழந்தையுடன் மனைவியை யானைகளிடம் இருந்து மீட்க போராடியது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கந்த்ரே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தல்
மேலும், பழக்கப்பட்ட யானைகள் கூட எதிர்பாராத விதமாக நடந்து கொள்ளக்கூடும் என்பதால், யானைகளின் தும்பிக்கையை தொடுதல், அருகில் நின்று புகைப்படம் எடுப்பது, யானைகளை குளிப்பாட்ட அனுமதிப்பது, வாழைப்பழம், வெல்லம் போன்ற உணவுகளை வழங்குவது போன்ற செயல்களுக்கு தடை விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் விலங்குகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications