3 மாதத்தில் 8 ஆணவக் கொலை.. தனிச்சட்டம் எப்போது கொண்டு வரப்படும்? ஆளூர் ஷா நவாஸ் சொன்ன பாய்ண்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதத்தில் மட்டும் 8 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக கூறிய ஆளூர் ஷா நவாஸ், திமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையை பெற்று தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி பகுதியில் காதலித்து வந்த இளைஞரும், மாணவியும் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் இரவு அந்த மாணவியின் தந்தை, இளைஞர் பார்த்திபனை சாதியின் பெயரால் திட்டி, அடித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பின் அடுத்த நாள் காலை தனது மகளை காணவில்லை என்று அந்த மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார். இதன்பின் செல்ஃபோன் டவர் லொகேஷனை வைத்து போலீசார் தேடிய போது, குமரவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தை காட்டி இருக்கிறது. அந்த இடத்திற்கு காவல்துறையினர் சென்ற போது, காதலர்கள் இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்தனர்.
இதனால் இளைஞர் பார்த்திபனின் குடும்பத்தினர் அந்த மாணவியின் தந்தை மீது ஆணவக் கொலை குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதனால் இரு கிராமங்களிலும் பதற்றம் நிலவி வருகிறது. ஏற்கனவே ஐடி ஊழியர் கவின் கடந்த ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த விவகாரத்தில் கடந்த மாதம் தான் கொலையாளி சுர்ஜித்தின் தாய் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த விவகாரத்தின் போது தமிழ்நாட்டில் ஆணவ கொலையை தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதன்பின் திமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் முழுமையாக ஆய்வு செய்து சட்டம் இயற்றுவதற்கான அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே அமைச்சர் வன்னி அரசு ஆணவ படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் பேசுகையில், ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் இயற்றக் கோரி சட்டசபையில் விசிக சார்பில் வலிமையாகக் குரல் எழுப்பப்பட்டது.
இதன்பின் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முன் 18-03-2026 அன்று எவிடென்ஸ் கதிர் உள்ளிட்டோருடன் ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தின் தேவை குறித்த ஆவணங்களை அளித்தோம். மீண்டும் ஜூன் 25ஆம் தேதி ஆணவக் கொலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆணையத்தை சந்தித்து முறையிட்டோம்.
ஆணையத்தை நாங்கள் இருமுறை சந்தித்த இந்த 3 மாத இடைவெளியில், தமிழ்நாட்டில் 8 ஆணவக்கொலைகள் நடந்துள்ளன. இதனிடையே மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில், ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டது. அதே உறுதியுடன் தவெக அரசு, நீதிபதி கே.என்.பாஷா ஆணையத்தின் அறிக்கையை விரைந்து பெற்று தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications