கீற்றுக்கொட்டகையில் நள்ளிரவில் நுழைந்த காதல் ஜோடி.. அதிர்ச்சியில் விடிந்த மயிலாடுதுறை.. பின்னணி என்ன

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இளம் காதல் ஜோடி ஒன்று, கீற்றுக்கொட்டகையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியெடுத்துள்ளது. இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட ஆணவக் கொலையா என்ற கேள்வியோடு போலீசார் தீவிர விசாரணையை துவங்கி உள்ளனர்.. மற்றொருபுறம், கோபமடைந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டை அடித்துச் சூறையாடி, சாலை மறியலில் குதித்துள்ளனர்.. இதனால் பெரும் பதற்றமும், பரபரப்பும் தரங்கம்பாடி அருகே ஏற்பட்டுள்ளது.

தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் பார்த்திபன் (19), விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

Mayiladuthurai love couple thatched hut

மயிலாடுதுறை காதல் ஜோடி

இவருக்கும் அருகில் உள்ள சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் மகள் திவ்யதர்ஷினிக்கும் (17) இடையே காதல் மலர்ந்ததாக தெரிகிறது.. திவ்யதர்ஷினி பிளஸ்-2 முடித்துவிட்டு, காலேஜில் சேருவதற்காக காத்திருந்துள்ளார்..

ஆனால் திவ்யதர்ஷினியும், பார்த்திபனும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் இவர்களுடைய காதலுக்கு பெண்ணின் வீட்டில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாளுக்கு நாள் இந்த விவகாரம் 2 குடும்பங்களுக்கும் இடையே புகைந்து கொண்டே இருந்திருக்கிறது... சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இது தொடர்பாக தகராறும் ஏற்பட்டுள்ளது.

திவ்யதர்ஷினி பார்த்திபன்

அப்போது திவ்யதர்ஷினியின் உறவினர்கள் பார்த்திபனை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதுடன், மனசாட்சியே இல்லாமல் கொடூரமாக தாக்கியதாகவும் தெரிகிறது. இதையடுத்து, பார்த்திபனின் உறவினர்கள் தரப்பில் பொறையாறு போலீஸ் ஸ்டேஷ்னல் அப்போதே புகாரும் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்தான் திடீரென, விடிகாலையில் தன்னுடைய மகள் திவ்யதர்ஷினியைக் காணவில்லை என்று அவரது அப்பா லட்சுமிகாந்தன், போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகாரைக் கொண்டு வந்து கொடுத்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினார்கள்..

ஆணவக் கொலையா? தற்கொலையா

சந்தேகத்தின் பேரில், பார்த்திபனின் செல்போன் சிக்னலை போலீசார் ஆய்வு செய்தபோது, அவரது சிக்னல் சாத்தங்குடி பாம்பாலம்மன் கோவில் எதிரே உள்ள குமரேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தை காட்டியது. சிக்னல் கிடைத்ததுமே, இன்ஸ்பெக்டர் சந்தானமேரி தலைமையிலான போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது அங்கிருந்த ஒரு சின்ன கீற்றுக்கொட்டகையில் பார்த்திபனும், திவ்யதர்ஷினியும் தனித்தனியாகத் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உடனடியாக 2 உடல்களையும் மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் சாலை மறியல்

கீற்றுக்கொட்டகையில் காதல் ஜோடி சடலமாக கண்டெடுக்கப்பட்ட செய்தி, அதற்குள் ஊர்முழுவதும் பரவியது.. ஆத்திரமடைந்த பார்த்திபனின் உறவினர்களும் கிராம மக்களும் உடனடியாக திரண்டு வந்தனர்..

"இது தற்கொலை இல்லை, சாதி வெறியால் நடத்தப்பட்ட திட்டமிட்ட ஆணவக் கொலை" என்று குற்றம் சாட்டி, சாத்தங்குடி கிராமத்தில் உள்ள திவ்யதர்ஷினியின் வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளை அதிரடியாக அடித்து நொறுக்கிச் சூறையாடினார்கள்.. வாசலில் நின்ற 4 மோட்டார் சைக்கிள்களும் அடித்து உடைக்கப்பட்டன.

நிலைமை கையை மீறிப் போகவே, 200-க்கும் மேற்பட்ட போலீசார் அந்தப் பகுதியில் அதிரடியாகக் குவிக்கப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மற்றும் சீர்காழி உதவி கலெக்டர் சுரேஷ் ஆகியோர் நேரில் வந்து பாதுகாப்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். சாத்தங்குடி கிராம நிர்வாக அலுவலர் ராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

விசிக, கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

இதனிடையே, இந்த மரணத்தைக் கொலை வழக்காக பதிவு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் திரளான பொதுமக்கள் பொறையாறு காவல் நிலையம் முன்பும், சாத்தங்குடி-தரங்கம்பாடி சாலையிலும் திரண்டு அதிரடி சாலை மறியலில் குதித்தனர்.

கொலை வழக்கு பதிவு செய்தால் மட்டுமே உடலைப் பெற்றுக்கொள்வோம் என்று அவர்கள் உறுதியாக நின்று போராடியதால் போலீசாருக்கும் அவர்களுக்குமிடையே பெரும் வாக்குவாதம் வெடித்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்ததால் அந்தச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. திருக்கடையூரிலும் வாலிபர் சங்கத்தினர் நடத்திய மறியலில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, முன்தினம் தாக்குதல் புகாரின் அடிப்படையில் திவ்யதர்ஷினியின் அப்பா உட்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காதல் ஜோடியின் மரணம் தற்கொலையா அல்லது ஆணவக் கொலையா என்பது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகே முழுமையாகத் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், அந்த கிராமங்களில் இன்னமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு நீடித்து வருகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+