பாக்யராஜ் இறப்புக்கு பிறகு அவர் பெயரில் வெளியான அறிக்கை.. பின்னணியில் இந்த நடிகர் தானா? ரசிகர்கள் கேள்வி இதுதான்
சென்னை: திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் மறைந்து சில நாட்களே ஆன நிலையில், அவருடைய பெயரில் சமூக வலைதளத்தில் வெளியான ஒரு அறிக்கை தற்போது ரசிகர்களிடையே பெரிய விவாதமாக மாறியுள்ளது. அந்த பதிவு பலரது கண்களையும் கலங்க வைத்தாலும், அதை உண்மையில் யார் எழுதியது என்ற கேள்வி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பாக்யராஜ் பெயரில் அறிக்கை
பாக்யராஜின் அதிகாரப்பூர்வ லெட்டர்பேட் வடிவத்தில் வெளியான அந்த அறிக்கை, அவர் ரசிகர்களிடம் நேரில் பேசுவது போல எழுதப்பட்டிருந்தது. அதில், "சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பது. நான் எழுதிய இந்த வாக்கியத்தை என் வாழ்க்கையின் பெரிய சந்தோஷமாக மாற்றிய ரசிகர்களுக்கும், தாய்மார்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் என் நன்றிகள். என் கண்களை மட்டும் உங்களின் அன்பான பார்வைக்கு விட்டுவிட்டு வந்திருக்கிறேன்" என்று தொடங்கியிருந்தது.
அதோடு, "என் கண்மணி சாந்தனுவின் வெற்றிக்கு இனி நீங்கள் தான் உறுதுணையாக இருக்க வேண்டும். நான் நல்ல சினிமாவில், நல்ல திரைக்கதையில், நல்ல வசனத்தில், நல்ல மனிதர்களின் மனதில் உயிரோடு இருப்பேன்" என்ற வரிகளும் இடம்பெற்றிருந்தன.

ரசிகர்களின் சந்தேகம்
இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதை பகிர்ந்து உருக்கமான கருத்துகளை பதிவிட்டனர். ஆனால் அதே நேரத்தில், "இது பாக்யராஜ் எழுதியது போல இருக்கிறது... உண்மையில் யார் எழுதியது?" என்ற கேள்வியும் எழ ஆரம்பித்தது.
பலரும், அந்த எழுத்து நடை மற்றும் வார்த்தைகளை பார்த்தவுடனேயே, "இது இயக்குநர் பார்த்திபனின் எழுத்து ஸ்டைல் போல இருக்கிறது" என்று கூற ஆரம்பித்தனர்.
ஏற்கனவே பாக்யராஜின் மறைவு முதல் இறுதி தகனம் வரை குடும்ப உறுப்பினரைப் போல ஓடி ஓடி அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்தவர் பார்த்திபன். இறுதி அஞ்சலியில் "அன்புடன் உங்கள் பாக்யராஜ்" என்று எழுதப்பட்ட பேடையும், பேனாவையும் அவரது உடலுடன் சேர்த்து வைத்திருந்ததும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அந்த சம்பவத்திற்குப் பிறகு வெளியான இந்த அறிக்கையையும் பார்த்திபன் தான் எழுதியிருக்கலாம் என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் இதற்கு எதிராக இன்னொரு தரப்பினர் வேறு கருத்தையும் கூறி வருகின்றனர்.
அறிக்கையை எழுதியது யார்?
"இந்த பதிவு பாக்யராஜின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில்தான் வெளியாகியுள்ளது. குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமல் யாராலும் அப்படிப்பட்ட பதிவை வெளியிட முடியாது. பார்த்திபன் எழுதியிருந்தால்கூட, அது குடும்பத்தின் விருப்பத்தோடும், அனுமதியோடும் தான் வெளியாகி இருக்கும். அதனால் இதை தேவையில்லாமல் சர்ச்சையாக்க வேண்டாம்" என்று பலர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
மேலும் சில ரசிகர்கள், "பார்த்திபன் பாக்யராஜின் சீடன் மட்டுமல்ல, அவரை தந்தை மாதிரி நேசித்தவர். அந்த அன்பில் அவர் எழுதியிருந்தாலும் அதில் எந்தத் தவறும் இல்லை. அந்த வரிகளில் ஒரு சீடனின் வலி மட்டுமே தெரிகிறது" என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ரசிகர்கள் கருத்து
மற்றொரு பக்கம், "பாக்யராஜ் பேசுவது போல எழுதப்பட்டிருப்பதால் சிலருக்கு சங்கடமாக இருக்கிறது. அதனால் இனிமேல் இதுபோன்ற பதிவுகளை அவரது பெயரில் வெளியிடாமல், நினைவாக மட்டும் பகிர்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும்" என்ற கருத்துகளும் வெளியாகி வருகின்றன.
எதுவாக இருந்தாலும், அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு வரியும் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது. குறிப்பாக, "என் கண்களை மட்டும் உங்களுக்காக விட்டுவிட்டு வந்திருக்கிறேன்", "சாந்தனுவின் வெற்றிக்கு நீங்கள் கைதட்ட வேண்டும்" போன்ற வரிகளை பலர் மீண்டும் மீண்டும் பகிர்ந்து வருகின்றனர்.













Click it and Unblock the Notifications