தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, லாக்-அப் மரணங்கள்.. நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, லாக்கப் மரணங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்யை பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தியுள்ளனர். இந்த இரு சம்பவங்களுக்கு எதிராகவும் முதல்வர் ஜோசப் விஜய் பேசியிருந்த நிலையில், தற்போது இரு சம்பவங்கள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விஜய்க்கு பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முதல்வர் விஜய்க்கு வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:

நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையின்படி, குற்றத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டு முழுமையாக முடிக்கப்பட வேண்டும்.
மேலும், குற்றவியல் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்து சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து, விரைவான விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையின்படி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள், காயமடைந்தோர், மீதமுள்ள அனைவருக்கும் முழுமையான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கை திரும்பப் பெறவேண்டும். மேலும், இதுகுறித்து வரும் மே 22 ஆம் தேதிக்குள் உத்தரவாதம் கொடுத்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் விசாரணையில் மரணமடைந்தோரின் குடும்பத்தினர் வைத்துள்ள கோரிக்கைகள்:
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் காவல் நிலைய விசாரணயில் நடந்த மரண வழக்குகள் அனைத்தையும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தி, குறிப்பிட்ட கால வரம்புக்குள் விரைவான விசாரணை நடத்தி நீதியையும் நிவாரணத்தைப் பெற்றுத்தர வேண்டும்.
கடந்த ஆட்சியில் காவல் விசாரணையில் மரணமடைந்து, அரசின் நிவாரணம் பெறாத, பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும், திருப்புவனம் அஜித்குமார் வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழங்கியதுபோல், அனைவருக்கும் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் காவல் விசாரணையில் மரணமடைந்த எஸ்சி/எஸ்டி சமூகத்தை சேர்ந்தவர்களின் வழக்குகளை, எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
விசாரணையின்போது காவல் நிலையங்களில் நடந்து வரும் சித்திரவதைகளை தடுத்திடவும், சித்திரவதை இல்லாத சமூகத்தை உருவாக்க தற்போதைய ஆட்சியில் சித்திரவதைக்கு எதிரான புதிய சிறப்புச் சட்டத்தை உருவாக்கவும் முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, சட்டசபை தேர்தலுக்கு முன்னர் 2025 ஆம் ஆண்டில் தவெகவின் மாநில மாநாட்டில் முதல்வர் பேசுகையில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண் ஸ்னோலினின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது, "தூத்துக்குடி ஸ்னோலினின் அம்மா, என்னைத் தனது தம்பி என்றும் அவரது மகளுக்கு நான் தாய்மாமன் என்றும் கூறினார். அந்த அக்காவின் குழந்தைக்கு மட்டுமில்லை, நான் என்னை அண்ணனாக, தம்பியாக நினைக்கும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சகோதரிகளின் குழந்தைகளுக்கும் தாய்மாமன்தான்" என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல், திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக காவல் துறையினரைக் கண்டித்து, 2025 ஜூலை 13-ல் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் விஜய் நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications