குதிரை பேரம்! நிரூபிக்கப்பட்டால் காத்திருக்கும் விபரீதங்கள்! தவெக பெயர், விசில் சின்னமே பறிபோகும்!
சென்னை: தமிழக அரசியலில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களைப் பிடிக்கக் கடுமையான பலப்பரீட்சை நடந்து வருகிறது. இதில் எம்.எல்.ஏ-க்களைக் கவர்வது அல்லது கட்டாயப்படுத்துவது போன்ற 'குதிரை பேரம்' புகார்கள் எழுந்து அது நிரூபிக்கப்பட்டால், அது ஒரு அரசியல் கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும். ஒருவேளை குதிரை பேரம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி என்ன நடக்கும்? என்பதைப் பார்ப்போம்.
1. ஆளுநரின் அதிகாரம்: குடியரசுத் தலைவர் ஆட்சி (President's Rule)
எந்த ஒரு கட்சியும் நேர்மையான முறையில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றோ அல்லது ஜனநாயகத்திற்குப் புறம்பான முறையில் (குதிரை பேரம்) எம்.எல்.ஏ-க்களைத் திரட்டுகிறார்கள் என்றோ ஆளுநர் கருதினால், அவர் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம்.
ஆளுநர் உடனடியாகத் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி, தமிழகத்தில் சட்டமன்றத்தை முடக்கி வைக்க (Suspended Animation) அல்லது கலைக்கப் பரிந்துரைக்கலாம்.
இதன் விளைவாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி 356-இன் படி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
2. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை: கட்சி மற்றும் சின்னம் முடக்கம்
தேர்தல் ஆணையம் (Election Commission) ஒரு கட்சியின் மீது சுமத்தப்படும் முறைகேடு புகார்களை மிகவும் தீவிரமாகக் கையாளும்.
ஆட்சி அமைக்க எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்தைப் போலியாகப் பயன்படுத்தியது அல்லது கடத்தலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.
மிக முக்கியமாக, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை (Party Name & Symbol) பயன்படுத்தத் தடை விதிக்கப்படலாம். இது ஒரு புதிய கட்சிக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவாக அமையும்.
3. கடுமையான குற்றவியல் நடவடிக்கை (Criminal Offense)
கையெழுத்து மோசடி (Forgery) மற்றும் ஆள் கடத்தல் (Kidnapping) போன்றவை வெறும் அரசியல் புகார்கள் மட்டுமல்ல, அவை இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி கடுமையான குற்றங்களாகும்.

போலி ஆவணங்களைத் தயாரித்ததற்காகவும், ஆளுநரை ஏமாற்ற முயன்றதற்காகவும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது குற்றவியல் வழக்குகள் பதியப்படலாம். தலைவர் விஜய் மீதும் வழக்கு பதியப்படும்.
தவறு செய்த எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன், அவர்கள் சிறை தண்டனை பெறவும் வாய்ப்புள்ளது.
தவெக-வின் 'ஆதார வீடியோ': விஜய்யின் மாஸ்டர் பிளான்?
இவ்வளவு கடுமையான சட்டச் சிக்கல்கள் இருப்பதை அறிந்தே, அமமுக எம்.எல்.ஏ காமராஜ் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு 'ஆதார வீடியோவை' வெளியிட்டுள்ளது. தவெக வெளியிட்டதாக சொல்லப்படும் அந்த வீடியோ அவர்களுக்கே எதிராக செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
வீடியோவில் என்ன இருக்கிறது? அமமுக எம்.எல்.ஏ காமராஜ், தவெக-விற்குத் தனது முழு மனதுடன் ஆதரவு அளிப்பதாகவும், அதற்கான கடிதத்தைத் தனது கைப்பட எழுதுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
தவெக-வின் வாதம்: "நாங்கள் யாரையும் கடத்தவில்லை, எந்தக் கையெழுத்தையும் மோசடி செய்யவில்லை. அவராகவே வந்து ஆதரவு தந்துவிட்டு, இப்போது அழுத்தத்தின் காரணமாக மாற்றிப் பேசுகிறார்" என்பதே தவெக-வின் நிலைப்பாடு.
விஜய்யின் வியூகம்: ஆளுநர் தன்னை 'குதிரை பேரம்' என்ற அடிப்படையில் நிராகரிக்கக் கூடாது என்பதற்காகவே, இந்த வீடியோவை ஒரு தற்காப்பு ஆயுதமாக விஜய் தரப்பு வெளியிட்டுள்ளது.
அடுத்த கட்டம் என்ன?
ஆனால் நேற்று ஆளுநர் மாளிகையிலிருந்து எம்.எல்.ஏ காமராஜுக்கு நேரடியாகத் தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. "நீங்கள் ஆதரவு கடிதம் கொடுத்தீர்களா?" என்ற கேள்விக்கு, "நான் அப்படி எந்தக் கடிதமும் தரவில்லை, நேரில் வருகிறேன்" என்று கூறிவிட்டு காமராஜ் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தார். ஆளுநர் முன்னிலையில் ஆஜரான எம்.எல்.ஏ காமராஜ், "நான் அதிமுக கூட்டணிக்கு மட்டுமே ஆதரவு அளிக்கிறேன். விஜய்க்கு ஆதரவு அளிக்கவில்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட ஒரு நிழற்பட நகலை (Photocopy) வைத்துக்கொண்டு விஜய் தரப்பு ஆளுநரை ஏமாற்ற முயன்றதாகத் தினகரன் குற்றம் சாட்டினார்.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆளுநர் ஆய்வு செய்வார். ஒருபுறம் அமமுக எம்.எல்.ஏ "என்னை மிரட்டிக் கையெழுத்து வாங்கினார்கள்" என நேரில் கூறுகிறார், மறுபுறம் அவர் கடிதம் எழுதும் வீடியோ இருக்கிறது. இந்த முரண்பாட்டில் ஆளுநர் எடுக்கும் முடிவே தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும்.
ஒருவேளை வீடியோ உண்மையாக இருந்தும் கூட விசிக-வின் 2 எம்.எல்.ஏ-க்களும் ஆதரவு கடிதம் கொடுத்தாலும் கூட , விஜய் 118 என்ற மேஜிக் எண்ணை எட்டினாலும் கூட.. ஆளுநர் இதை ஏற்காமல் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்யலாம்!












Click it and Unblock the Notifications