திருமாவளவன் விஜய்க்கு ஸ்வீட் ஷாக்.. காரில் அப்டேட் தந்த ஆதவ் அர்ஜுனா! 2 நாள் டென்ஷன் விலகியது எப்படி
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கடந்த 48 மணி நேரமாக நீடித்து வந்த அரசியல் முட்டுக்கட்டை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.. விசிக தலைவர் திருமாவளவன் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் வழங்கியதை அடுத்து, விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்பது உறுதியாகியுள்ளது.. அசோக் நகர் டூ கோட்டை வரை கடந்த 3 நாட்களாகவே நிலவி வந்த டென்ஷன் நிமிடங்களின் சுருக்கமாக பின்னணி இது..!!
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான சூழலை கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகரம் எதிர்கொண்டது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தொங்கு சட்டசபை என்ற இக்கட்டான சூழல் உருவானது.
விஜய்க்கு ஸ்வீட் ஷாக்
108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் நம்பரை எட்ட முடியாமல் தவித்து வந்தது.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் 116 என்ற எண்ணிக்கையை எட்டிய விஜய்க்கு, இன்னும் 2 எம்எல்ஏ-க்களின் பலம் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது.. இந்த 2 இடங்களே தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறியது..
விசிக தவெகவுக்கு ஆதரவு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆரம்பத்திலேயே தனது ஆதரவை மறுத்துவிட்ட நிலையில், ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தை நோக்கித் திரும்பியது.. இதனால் தமிழக அரசியலில் ஒருவித பதற்றம் நிலவி வந்தது.
அன்றைய தினமே விசிக-வின் உயர்நிலைக் குழுக் கூட்டம் கூடி ஆலோசித்த போதிலும், எடுக்கப்பட்ட முடிவு என்ன என்பதை ரகசியமாகவே வைத்திருந்தனர்.. இதனால் விசிக-வின் ஆதரவு கடிதத்தை எதிர்பார்த்து காத்திருந்த தவெக-வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது..
ஒருபுறம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதரவு கடிதம் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க மறுக்க, மறுபுறம் விசிக அமைதி காக்க, ஒவ்வொரு நிமிடமும் தவெக தலைமைக்கு டென்ஷன் எகிறியது.
திருமாவளவன் எங்கே போனார்
நேற்று காலை விசிக தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வன்னியரசு மற்றும் சிந்தனை செல்வன் ஆகியோரது சோஷியல் மீடியா பதிவுகள் தவெக-வுக்கு ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகத்தை கிளப்பிவிட்டது அதற்கு மேல் பரபரப்பை தந்துவிட்டது. இதனால் அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் தவெக தொண்டர்களும் ஊடகங்களும் குவிந்ததால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.
காலை முதல் மாலை வரை பலமுறை செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது விஜயை கடும் அப்செட்டில் ஆழ்த்தியது.. ஒருபுறம் ஆளுநரின் கெடுபிடி, மறுபுறம் திருமாவளவனின் இழுபறி என விஜய் தரப்பு என்ன செய்வதென்று தெரியாமல் திணறியது..
தண்ணி காட்டிய திருமாவளவன்
திருமாவளவன் தவெக-வை தண்ணி காட்டி வருகிறார் என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.. இதற்கு நடுவில் திருமாவளவனையே காணோம், எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை குண்டை தூக்கி போட்டார்கள்.
இந்த நிலையில் தான், மாலை 4 மணிக்கும் எந்த அறிவிப்பும் வராத சூழலில், விசிக-வின் ஆதவ் அர்ஜூனா திடீரென அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தினார்.. தனது காரில் வெளியே வரும்போது ஊடகங்களுக்கு மின்னல் வேகப் பேட்டி ஒன்றை அளித்த அவர், அந்தக் காரில் இருந்தபடியே, "விசிக தலைவர் திருமாவளவன் தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு கடிதத்தை வழங்கிவிட்டார்" என்ற ரகசியத்தை போட்டு உடைத்தார்..
சென்னை அசோக்நகர் டென்ஷன்
முதலில் இந்தத் தகவல் உண்மையா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அந்த ஒரு பேட்டி தான் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது..
ஆதவ் அர்ஜூனா காரில் இருந்தபடியே சொன்ன அந்தத் தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே, திருமாவளவன் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து ஆதரவை உறுதிப்படுத்தினார்..
செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் எதற்காக தவெகவுக்கு ஆதரவு என்று 2 காரணங்களை சொன்னார்.. தமிழகத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் சூழல் ஏற்பட்டதால் தவெக ஆட்சி அமைக்க சிரமப்படலாம் என்ற நிலையை கருத்தில் கொண்டு, விசிக மற்றும் இடதுசாரிகள் இணைந்து ஆலோசித்தோம் என்று தெரிவித்தார்.
இரண்டு முக்கிய காரணங்கள்
மேலும், தவெக ஆட்சியமைக்க விசிக நிலைப்பாடு தடையாக இருக்கக் கூடாது மற்றும் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வரக் கூடாது என்ற இரண்டு முக்கிய காரணங்களின் அடிப்படையில் தான் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று விளக்கமும் தந்தார்.
இறுதியில் 118-க்கும் அதிகமான எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் விஜய் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.. ஒருவழியாக விசிக-வின் பிடிவாதத்தால் ஏற்பட்ட 48 மணி நேர டென்ஷன் நிமிடங்களுக்குப் பிறகு தமிழகத்தில் புதிய அரசு அமைவது என உறுதி செய்யப்பட்டது..!!












Click it and Unblock the Notifications