சந்திரபாபு நாயுடு குப்பம் சாலையில் சட்டென உட்கார்ந்து.. ஆசை ஆசையாக சாப்பிட்ட பனை நுங்கு.. வைரல் சீன்
ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேச முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசியத் தலைவருமான சந்திரபாபு நாயுடு, தனது எளிய மற்றும் கனிவான குணத்திற்கு பெயர் பெற்றவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.. இப்போது தனது சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சோஷியல் மீடியாவில் நுங்கு வீடியோ அதிகமாக ஷேர் ஆகி வருவதற்கு என்ன காரணம் தெரியுமா?
குப்பத்தில் கடந்த இரண்டு நாட்களாகத் திருப்பதி கங்கையம்மன் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது மனைவியுடன் இணைந்து, அரசு சார்பில் அம்மனுக்குப் பட்டு வஸ்திரத்தை காணிக்கையாகச் சமர்ப்பித்து வழிபாடு நடத்தினார்.

சந்திரபாபு நாயுடு - பனை நுங்கு
மத வழிபாட்டு நிகழ்வுகளை முடித்துக்கொண்டு, மதியம் கார் மூலம் பெங்களூரு புறப்பட்டார். அங்கிருந்து விமானம் மூலம் விஜயவாடா செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், குப்பம் பகுதியை அடுத்த தஞ்சம்ம கொட்டாலா என்ற இடத்தை கடந்து சென்றார்.
அப்போது சாலை ஓரத்தில் வியாபாரி ஒருவர் பனை நுங்குகளை விற்பனை செய்து கொண்டிருப்பதை முதலமைச்சர் கவனித்தார். கிராமத்து இயற்கையான சுவை கொண்ட பனை நுங்குகளை பார்த்ததுமே சந்திரபாபு நாயுடுக்கு அவைகளை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. உடனே தனது வாகனத்தை நிறுத்த சொல்லி, அந்த வியாபாரியிடம் சென்றார்.
ஆச்சரியம் - நெகிழ்ச்சி
தன்னுடன் வந்திருந்த மனைவி மற்றும் உடன் வந்திருந்தவர்களுக்கும் பனை நுங்கு தரும்படி அவர் கேட்டார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தனது கடைக்கு வந்து, நுங்கு கேட்டதால், அந்த கடைக்காரர் திக்குமுக்காடிப் போய்விட்டார்..
உடனே முதலமைச்சருக்கு அவர் கேட்டபடியே பனை நுங்குகளை ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து வெட்டி பெருமகிழ்ச்சியுடன் முதலமைச்சரிடம் வழங்கினார். சந்திரபாபு நாயுடு அந்த நுங்குகளை மிகுந்த ஆர்வத்துடன் ருசித்து சாப்பிட்டார். இதைக்கண்டு அந்த வியாபாரி மிகுந்த மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். பனை நுங்கு சாப்பிட்டுக்கொண்டே, அந்த வியாபாரியிடம் அன்புடன் நலம் விசாரித்தார் சந்திரபாபு நாயுடு.. பிறகு தான் சாப்பிட்ட நுங்குகளுக்கான தொகையைச் சரிவர கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
கலப்படம் இல்லை, பூச்சிக்கொல்லி மருந்து இல்லை
இந்தச் சம்பவம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், "கலப்படம் இல்லை, கார்பைடு இல்லை, பூச்சிக்கொல்லி மருந்து கவலை இல்லை... நம் குப்பம் மக்களின் மனதைப் போலவே தூய்மையான, குளிர்ச்சியான பனை நுங்குகளைச் சாலை ஓரத்தில் நின்று சாப்பிடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் கிராமப்புற உணவுப் பொருட்களை விடச் சிறந்தது எது?" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ஒரு மாநிலத்தின் உயரிய பொறுப்பில் இருந்தாலும், மக்கள் அன்றாடம் உண்ணும் எளிய உணவுப் பொருளைத் தேடிச் சென்று உண்டு மகிழ்ந்த முதலமைச்சரின் இந்தப் பண்பு, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் வியாபாரியிடம் நலம் விசாரித்து, பணத்தைக் கொடுத்துவிட்டு சென்ற அந்த நிமிடம், அங்கிருந்தவர்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது...!!












Click it and Unblock the Notifications