IUML: நாளை சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பதவியேற்கிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்? விஜய்யை சந்தித்து கடிதம்
சென்னை: தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல்லும் பங்கெடுக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை ஐயுஎம்எல் நிர்வாகிகள் சந்தித்து, எம்.எல்.ஏ ஷாஜகானை அமைச்சரவையில் சேர்ப்பதற்கான கடிதத்தை வழங்கினர். இதையடுத்து ஷாஜகான் நாளை அமைச்சராக பதவியேற்கலாம் என்றும், அவருக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த 10 ஆம் தேதி பொறுப்பேற்றது. முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர்களுக்கும் ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு பிறகு த.வெ.க. அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 23 எம்.எல்.ஏ.க்கள் இன்று புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

த.வெ.க. கூட்டணி அமைச்சரவையில் 7 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மொத்த அமைச்சரவையில் சுமார் 20 சதவீத பங்கீட்டை பட்டியலின அமைச்சர்கள் கொண்டுள்ளனர். இதேபோன்று 59 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் இரண்டு பேர் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
இதேபோன்று விஜய் ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த விசிக மற்றும் ஐயுஎம் எல்லும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென விஜய் அழைப்பு விடுத்து இருந்தார். இது தொடர்பாக இரு கட்சிகளும் ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறியிருந்தனர். இந்த நிலையில் ஐயுஎம் எல் சார்பில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ அமைச்சர் ஆக அக்கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது.
த.வெ.க. அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்தது. இந்த நிலையில் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தவெக சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பினை அடுத்து அக்கட்சியின் நிர்வாக குழு கூட்டம் தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் மண்ணடியில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ.க்கள் சையத் பாரூக்ஷா, ஷாஜகான் ஆகிய இருவரும் பங்கேற்றனர். இவர்களில் யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்று விவாதிக்கப்பட்டது. இறுதியில் ஷாஜகானுக்கு அமைச்சரவையில் இடம்பெற முடிவு செய்யப் பட்டது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் கூறுகையில், "இந்தக் கூட்டத்தில் த.வெ.க. அமைச்சரவையில் பாபநாசம் தொகுதியை சேர்ந்த ஷாஜகானை இடம்பெற செய்வது என தீர்மானிக் கப்பட்டது. அதன்படி அவர் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவார்" என்றார்.
இதனையடுத்து சென்னை தலைமைச் செயலகம் வந்த ஐயுஎம்எல் கட்சி நிர்வாகிகள் முதல்வர் விஜய்யை சந்தித்து, எம்.எல்.ஏ ஷாஜகான் தவெக அமைச்சரவையில் இடம்பெறுவார் என்பதற்கான கடித்தத்தின கொடுத்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு. முகமது அபுபக்கர், தேசிய செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. நவாஸ் கனி ஆகியோர் விஜய்யை சந்தித்துப் பேசினர். இதனையடுத்து ஷாஜகான் நாளை அமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. ஷாஜகானுக்கு சிறுபான்மை நலத்துறை வழங்கப்படும் என கூறப்படுகிறது.














Click it and Unblock the Notifications