Fake News -கள் மூலம் தவெக போடும் ஆட்டம்! விஜய்யின் வீழ்த்த முடியாத இன்விசிபிள் கேம்! திக் ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின், முதல் 10 நாட்களில், சோசியல் மீடியாவில் என்னவெல்லாம் நடந்தது என்பதைப் பற்றிய ஒரு தெளிவான அலசல் தான் இந்த கட்டுரை. தவெகவினர் சமூகவலைத்தளத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி எப்படி "மைண்ட் கேம்" ஆடுகிறார்கள் என்று.. நீங்களே வியக்கும் வகையில் சுவாரசிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

'தி இன்விசிபிள் கேம்' (The Invisible Game) என்றொரு பிரபலமான புத்தகம் இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சில சக்திகள், உலகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களின் எண்ணங்களை எப்படி தங்களிடம் இருக்கும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மூலமாக ரகசியமாக மாற்றி அமைக்கிறார்கள் என்பதுதான் அந்தப் புத்தகத்தின் கதை.

அந்தப் புத்தகத்தில் ஒரு முக்கியமான விஷயம் சொல்லப்பட்டிருக்கும். அதாவது, சோசியல் மீடியாக்கள் (ஃபேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்அப் போன்றவை) நாம் நிதானமாகப் போடும் நல்ல செய்திகளை விட, மக்கள் கோவப்பட்டு ஆத்திரத்தோடு போடும் செய்திகளையும், தற்காலிகமாக நமக்கு ஒரு சந்தோஷத்தைத் தரும் செய்திகளையும் தான் மற்றவர்களுக்கு அதிகமாகக் கொண்டு போய் சேர்க்கும் (இதற்கு அல்காரிதம் மற்றும் மனிதர்களிடம் சுரக்கும் டோபமைன் கெமிக்கல் என்று நிறைய காரணங்கள் உள்ளன).

அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட அதே தொழில்நுட்ப விளையாட்டுதான், விஜய் ஜெயித்தவுடன் ஒரே ராத்திரியில் தமிழ்நாட்டிலும் அரங்கேறியது. அதுவும் நம் கண் முன்னால், இப்பொழுதே நடந்து கொண்டிருக்கிறது.

விஜய் முதல்வராக பதவி ஏற்றபின், இணையத்தில் பரவிய சில பொய்க் கதைகளையும், அதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்துகளையும் 'தி ஹிந்து' நாளிதழின் உண்மை கண்டறியும் குழுத் தலைவர் டி. சுரேஷ் குமார் ஆதாரங்களோடு விளக்கியுள்ளார். அதை மிக எளிமையாக, சாமானிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

அத்தியாயம் 01 - தி ஸ்பார்க் (The Spark)

ஒரு பாசக் கூட்டம் எப்படி இணையப் புயலாக மாறியது?

தேர்தலில் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களை ஜெயித்து ஆட்சியைப் பிடித்தது ஒரு நிஜமான அரசியல் மாற்றம். ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் கொண்டாடியே தீர வேண்டிய ஒரு பெரிய வெற்றி இது.

ஆனால், விஜய் முதலமைச்சராக நாற்காலியில் உட்கார்ந்த சில மணி நேரங்களிலேயே, சோசியல் மீடியாவில் ஒரு வித்தியாசமான ஆட்டம் தொடங்கியது. முகநூல் (Facebook), எக்ஸ் (Twitter), வாட்ஸ்அப் என்று எல்லா இடங்களிலும் தவெக ஆதரவாளர்களும், ரசிகர்களும், சில இணையப் பக்கங்களும் இந்த வெற்றியைக் கொண்டாடிக் கதைகளை எழுத ஆரம்பித்தார்கள்.

The Invisible Social Media game behind Tamil Nadu CM Vijay and TVKs Social Engineering

இங்குதான் ஒரு சிக்கல் எழுந்தது. இவர்கள் வெறும் கொண்டாட்டத்தோடு நிறுத்தாமல், இல்லாத சில வரலாறுகளைப் புதிது புதிதாக உருவாக்கத் தொடங்கினார்கள். இது ஏதோ கட்சித் தலைமை திட்டமிட்டுச் செய்த வேலை இல்லை. மாறாக, ஒவ்வொரு ரசிகரும், யூடியூபரும் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு, "நான் தான் விஜய்யை இன்னும் பெருமையாகக் காட்டுவேன்" என்று கிளம்பியது தான் காரணம்.

இதன் விளைவாக, ஒரே வாரத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி எனப் பல மொழிகளில் ஏகப்பட்ட போலிச் செய்திகள் இணையத்தை நிரப்பின.

அத்தியாயம் 02 - தி நம்பர்ஸ் கேம் (The Numbers Game)

ஆளுக்கு ஆள் மாற்றிச் சொன்ன எஸ்சி எம்.எல்.ஏக்கள் கணக்கு

ஒரு பொய் செய்தி எப்படிப் பகிரப்படப் பகிரப்பட உருமாறுகிறது என்பதற்கு தவெக-வின் எஸ்சி (SC) வேட்பாளர்கள் பற்றிய செய்தி ஒரு நல்ல உதாரணம். சோசியல் மீடியாவில் இந்தச் செய்தி எப்படி ஆளுக்கு ஆள் மாறியது என்று பாருங்கள்:

முதல் ஆள் சொன்னது: "தவெக பொதுத் தொகுதியில தலித் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கு, இது பெரிய சமூகப் புரட்சி!"

அடுத்த ஆள் சொன்னது: "பொதுத் தொகுதியில நின்ன தவெக தலித் வேட்பாளர்கள் 5 பேர் ஜெயிச்சிட்டாங்க!"

மூன்றாவது ஆள் சொன்னது: "இல்லை இல்லை, 20 பேர் பொதுத் தொகுதியில போட்டி போட்டாங்க!"

கடைசியாக வைரலான செய்தி: "தவெக-வில் 28 தலித் எம்.எல்.ஏக்கள் ஜெயிச்சிருக்காங்க. பொதுத் தொகுதியில தலித்துகளைப் போட்டி போட வச்ச ஒரே கட்சி தவெக தான்!"

The Invisible Social Media game behind Tamil Nadu CM Vijay and TVKs Social Engineering

வைரலான செய்தி:

தவெக பொதுத் தொகுதிகளில் 28 எஸ்சி வேட்பாளர்களை நிறுத்தி ஜெயிக்க வைத்துப் பெரிய சமூக நீதிப் புரட்சி செய்துள்ளது.

உண்மையான நிலவரம்:

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ கணக்கைப் பார்த்தால், தவெக பொதுத் தொகுதியில் ஒரே ஒரு எஸ்சி வேட்பாளரைத் தான் நிறுத்தியிருந்தது (சங்கராபுரம் தொகுதி). அவரும் அந்தத் தேர்தலில் ஜெயிக்கவில்லை. உண்மையில், நாம் தமிழர் கட்சி தான் பொதுத் தொகுதிகளில் பல எஸ்சி வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. மேலும், இந்தத் தேர்தலில் பொதுத் தொகுதியில் நின்று ஜெயித்த ஒரே எஸ்சி வேட்பாளர் மேலூர் தொகுதியில் வென்ற காங்கிரஸ் கட்சியின் விஸ்வநாதன் மட்டும்தான்.

ஒரு பொய் செய்தி 'ஷேர்' (Share) செய்யும் வேகத்தில் பறந்து விடுகிறது. ஆனால், உண்மையான விபரங்களை மக்கள் நிதானமாகப் படித்துத் தெரிந்துகொள்ள நேரமாகிறது.

அத்தியாயம் 03 - பிராண்ட் vs ஆவணம் (The Brand vs. The Document)

மேடைப் பேச்சும்... தேர்தல் சொத்துக் கணக்கும்...

விஜய் மேடைகளில் பேசும்போது, "எனக்கு வறுமைன்னா என்ன, பசின்னா என்னன்னு நல்லா தெரியும். எளிய பின்னணியில இருந்து வர்றதுல தப்பில்லை" என்று எதார்த்தமாகப் பேசினார். அது ஒரு நல்ல எண்ணம் தான்.

ஆனால், இதைப் பிடித்துக் கொண்ட தவெக-வின் புதிய அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும், தங்களுக்குள் யார் பெரிய ஏழை என்று போட்டி போடத் தொடங்கினார்கள். ஒரு அமைச்சர் "எனக்கு வாடகை கொடுக்கக் கூடப் பணமில்லை" என்றார். இன்னொருவர் "சென்னைக்கு வர வண்டிக்காசு இல்லை" என்றார். ஒருவர் டீக்கடைக்கார் என்றார், இன்னொருவர் ஆட்டோ டிரைவர் என்றார்.

அவர்கள் சொன்னது ஒருபுறம் இருக்க, அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் சட்டப்படி தாக்கல் செய்த சொத்துப் பிரமாணப் பத்திரங்களைத் (Affidavits) திறந்து பார்த்தால் உண்மை வேறாக இருந்தது.

The Invisible Social Media game behind Tamil Nadu CM Vijay and TVKs Social Engineering

அவர்களில் பலருக்குக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருந்தன. ஆடம்பர கார்கள், பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் என வசதியாக வாழும் நபர்களாகவே அவர்கள் இருந்தனர். தேர்தல் ஆணையத்தின் காகிதங்கள் எதையும் மறப்பதில்லை, அவை அப்படியே தான் இருக்கின்றன. சோசியல் மீடியா உணர்ச்சிகரமான ஏழைக் கதைகளை மட்டுமே நம்பி ரீல்ஸ்களை (Reels) வைரலாக்கியது; ஆனால் நிஜமான சொத்துக் கணக்கு ஆவணங்கள் தேர்தல் அலுவலகத்தில் தூசு படியக் கிடந்தன.

அத்தியாயம் 04 - எஸ்தெடிக்ஸ் பீட் அரித்மெடிக் (Aesthetics Beat Arithmetic)

தவெக எம்.எல்.ஏக்கள் மொத்தம் 108 பேர்... ஆனா கணக்குல 126 வருதே!

இணையத்தில் ஒரு அழகான படம் (Infographic) வைரலானது. அதில் தவெக எம்.எல்.ஏக்களின் கல்வித் தகுதிகள் ரொம்பப் பிரமாதமாகப் பட்டியலிடப்பட்டிருந்தன. பார்ப்பதற்குப் பெரிய நிறுவனங்கள் தயாரித்தது போல அத்தனை அழகாக இருந்தது. ஆனால், அதில் இருந்த எண்களைக் கூட்டிப் பார்த்தால் தான் ஒரு தமாஷ் தெரிந்தது.

The Invisible Social Media game behind Tamil Nadu CM Vijay and TVKs Social Engineering

அதில் போடப்பட்டிருந்த கணக்கு இதுதான்:

பிஹெச்டி (PhDs) படித்தவர்கள் - 6

முதுகலை பட்டதாரிகள் - 22

ஐஐடி இன்ஜினியர்கள் - 5

டாக்டர்கள் - 8

வழக்கறிஞர்கள் & இன்ஜினியர்கள் - 40

பட்டதாரிகள் - 25

12ஆம் வகுப்பு படித்தவர்கள் - 12

10ஆம் வகுப்பு படித்தவர்கள் - 8

இப்படியே எல்லாரையும் கூட்டினால் மொத்தம் 126 எம்.எல்.ஏக்கள் என்று வருகிறது.

ஆனால் தவெக ஜெயித்த மொத்த இடங்களோ 108 மட்டும்தான் (அதி்லும் விஜய் திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்ததால் தற்போதைய எண்ணிக்கை 107).

இந்தப் படத்தை லட்சக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்தார்கள். ஆனால் ஒருத்தர் கூட இதில் இருக்கும் எண்களைக் கூட்டிப் பார்க்கவில்லை. சோசியல் மீடியாவில் ஒரு விஷயம் உண்மையாக இருக்கிறதா என்று பார்ப்பதை விட, அது கண்ணுக்கு அழகாக இருக்கிறதா என்று பார்த்துப் பகிரும் பழக்கமே மக்களிடம் அதிகமாக இருக்கிறது.

அத்தியாயம் 05 - வரலாற்றை அழித்தல் (Erasing History)

விஜய் வருவதற்கு முன்னால் தமிழ்நாட்டில் பெண்களும் தலித்துகளும் அமைச்சராகவே இல்லையா?
போலிச் செய்திகளை உருவாக்குபவர்கள் கையில் எடுக்கும் ஆகச்சிறந்த ஆயுதம்: "வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை" என்று சொல்வது. பொதுமக்களுக்குப் பழைய வரலாறு சட்டென்று நினைவுக்கு வராது என்பதால், இதைச் சுலபமாக நம்பி விடுகிறார்கள்.

The Invisible Social Media game behind Tamil Nadu CM Vijay and TVKs Social Engineering

அப்படி பரவிய இரண்டு பெரிய பொய்களும், அதற்கான உண்மைகளும் இதோ:

வைரலான செய்தி 1:

"தமிழ்நாட்டுக்கு வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு பெண் அமைச்சரை விஜய் தான் தந்திருக்கிறார்!"

உண்மையான நிலவரம்:

தமிழ்நாட்டில் ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா என இரண்டு பெண் முதலமைச்சர்களே இருந்துள்ளனர். சுதந்திரத்திற்கு முன்பே ருக்மிணி லட்சுமிபதி அமைச்சராக இருந்திருக்கிறார். அதுபோக ஜோதி வெங்கடாசலம், லூர்தம்மாள் சைமன், சத்தியவாணி முத்து, வளர்மதி, கோகுல இந்திரா, கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ் எனப் பல பெண் அமைச்சர்களைத் தமிழ்நாடு பார்த்திருக்கிறது.

வைரலான செய்தி 2:

"சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு தலித் தலைவர் கல்வி அமைச்சராகியுள்ளார்!"

உண்மையான நிலவரம்:

காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே கக்கன் (Kakkan) உள்துறை அமைச்சராக இருந்தார். கருணாநிதி அமைச்சரவையில் பரிதி இளம்வழுதி செய்தி அமைச்சராக இருந்தார். ஜெயலலிதா ஆட்சியில் தனபால் சபாநாயகராக இருந்தார். கடந்த ஸ்டாலின் ஆட்சியில் கே. பொன்முடி உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார்.

விஜய் வந்த பிறகுதான் தமிழ்நாட்டின் வரலாறே ஆரம்பிப்பது போலச் சோசியல் மீடியாவில் எழுதுவது, இதற்கு முன்னால் தமிழ்நாட்டில் சாதனை படைத்த முந்தைய பெண் தலைவர்களையும், தலித் தலைவர்களையும் அவமதிப்பது போன்றதாகும்.

அத்தியாயம் 06 - ஏஐ, பழைய இணையதளங்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட சுற்றறிக்கைகள் (AI, Old Portals, Recycled Circulars)

கம்ப்யூட்டர் தயாரித்த சாப்பாட்டுப் பெட்டியும், 25 வருஷப் பழைய வெப்சைட்டும்
சோசியல் மீடியாவுக்குத் தினமும் ஏதோ ஒரு புது செய்தி தேவைப்படுகிறது. நிஜத்தில் அப்படி எதுவும் வராதபோது, ஆர்வக் கோளாறில் சில ஆதரவாளர்கள் ஏஐ (AI - செயற்கை நுண்ணறிவு) மூலமாகப் பொய் படங்களை உருவாக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

The Invisible Social Media game behind Tamil Nadu CM Vijay and TVKs Social Engineering

சாப்பாட்டுப் பெட்டி படம்: முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தில் ஒரு எளிய டிஃபன் பாக்ஸைத் திறந்து சாப்பிடுவது போன்ற ஒரு படம் பயங்கரமாக வைரலானது. உண்மையில் அது கம்ப்யூட்டரால் (AI) உருவாக்கப்பட்ட ஒரு போலிப் படம். அது பொய் என்று நிரூபித்த பிறகும் மக்கள் அதை ஷேர் செய்து கொண்டே இருந்தார்கள்.

விஐபி துண்டு கலாச்சாரம் ஒழிப்பு: பொதுமக்கள் கேட்ட ஒரு மணி நேரத்துல முதலமைச்சர் நாற்காலியில் இருந்த "விஐபி துண்டு" போடும் பழக்கத்தை விஜய் மாற்றிவிட்டார் என்று ஒரு செய்தி பரவியது. ஆனால், பழைய போட்டோக்களை எடுத்துப் பார்த்தால் கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் போன்ற முந்தைய முதலமைச்சர்கள் யாருமே தங்கள் நாற்காலியில் அப்படித் துண்டு போட்டதே இல்லை என்பது தெளிவாகத் தெரியும். இல்லாத ஒரு விஷயத்தை சாதனையாக மாற்றினார்கள்.

முதலமைச்சர் உதவி எண் வெப்சைட்: "விஜய் அரசு புதிய புகார்ப் பெட்டி இணையதளத்தைத் தொடங்கியுள்ளது, மக்கள் நேராக விஜய்க்கே புகார் அனுப்பலாம்" என்று லிங்க் பரவியது. உண்மை என்னவென்றால், அந்த முதலமைச்சர் குறைதீர்க்கும் பிரிவு இணையதளம் தமிழ்நாட்டில் தொடங்கி 25 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. பழைய வெப்சைட்டுக்கு புதுப் பெயர் கொடுத்துப் பரப்பினார்கள்.

பேருந்துகளில் அவசரப் பொத்தான் (Panic Button): பெண்களின் பாதுகாப்புக்காகப் பேருந்துகளில் அவசரப் பொத்தான்களை விஜய் அரசு பொருத்தியுள்ளது என்று சொன்னார்கள். ஆனால், சென்னையில் ஓடும் மாநகரப் பேருந்துகளில் (MTC) இந்தத் தேர்தலுக்கு முன்பே அந்தப் பொத்தான்கள் வைக்கப்பட்டிருந்தன.

கடந்த வருடம் அரசு அதிகாரி ஒருவர் போட்ட சாதாரணச் சுற்றறிக்கையைக் கூட, ஏதோ விஜய் இன்று காலை போட்ட புதிய உத்தரவு போலப் பரப்பினார்கள். அதில் பழைய தேதியே இருந்தது, ஆனால் யாரும் பார்க்கவில்லை.

அத்தியாயம் 07 - உச்சக்கட்ட அபத்தம் (Peak Absurdity)

பாவம், அந்த ஆமைக் குஞ்சுகள் கூட விஜய்யின் அலையில் சிக்கிவிட்டன!
இந்த எல்லா போலிச் செய்திகளிலும் உச்சக்கட்ட காமெடி எதுவென்றால், கடலில் ஆமைக் குஞ்சுகளை விட்ட கதைதான்.

தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதிகளில் வனத்துறை ஒவ்வொரு ஆண்டும் ஆலிவ் ரிட்லி (Olive Ridley) ஆமை முட்டைகளைச் சேகரித்து, குஞ்சுகள் பொரித்ததும் கடலில் விடுவது வழக்கம். இது பல வருடங்களாக நடக்கும் ஒரு சாதாரண விஷயம்.

வைரலான செய்தி:

"தளபதி விஜய் ஆட்சியில், கடலை நோக்கி வைக்கப்படும் ஒவ்வொரு சிறிய அடியும் இயற்கையின் வெற்றி. விஜய் அரசு 1.65 லட்சம் ஆமைக் குஞ்சுகளைக் கடலில் விடும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது" என்று இந்தி மொழியில் வடஇந்தியாவில் இதைப் பரப்பினார்கள்.

அந்த ஆமைக் குஞ்சுகள் கடலுக்குள் போகப் புதிய முதலமைச்சர் எப்போது வருவார் என்றா காத்துக் கொண்டிருந்தன? ஒவ்வொரு வருடமும் இயற்கையாகவும், அரசு அதிகாரிகளாலும் வழக்கமாக நடக்கும் ஒரு விஷயத்தைக் கூட "விஜய்யின் சாதனை" என்று மாற்றும்போதுதான், இந்த சோசியல் மீடியா உலகம் நிஜ உலகத்தை விட்டு எவ்வளவு தூரம் தள்ளிப் போயிருக்கிறது என்பது புரிகிறது.

The Invisible Social Media game behind Tamil Nadu CM Vijay and TVKs Social Engineering

அத்தியாயம் 08 - உண்மையான எச்சரிக்கை (The Real Warning)

ஆபத்து எதிர்க்கட்சிகளால் இல்லை; அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளால் தான்!

'தி ஹிந்து' நாளிதழின் டி. சுரேஷ் குமார் இந்த விபரங்களைச் சொல்வது விஜய்யை எதிர்ப்பதற்காகவோ அல்லது தவெக அரசைக் குறை சொல்வதற்காகவோ அல்ல. மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி தவெக-வுக்கு ஓட்டுப் போட்டிருக்கிறார்கள், அந்தத் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். இந்த அரசு வேலை செய்ய அவர்களுக்கு முழு நேரமும் கொடுக்க வேண்டும்.

அவர் எச்சரிப்பது எதைப்பற்றி என்றால், இப்படி இல்லாத ஒன்றை எல்லாம் சாதனையாகக் காட்டி சோசியல் மீடியாவில் ஒரு போலி உலகத்தை உருவாக்கினால், அது கடைசியில் விஜய்க்கே பெரிய ஆபத்தாக முடியும்.

The Invisible Social Media game behind Tamil Nadu CM Vijay and TVKs Social Engineering

ஒவ்வொரு பழைய திட்டத்தையும் புதிய புரட்சி என்று சொன்னால், ஒவ்வொரு சாதாரண விஷயத்தையும் வரலாற்றுச் சாதனை என்று காட்டினால், காலப்போக்கில் மக்கள் இந்த அரசு செய்யும் உண்மையான, நல்ல சாதனைகளைக் கூட நம்பாமல் போய்விடுவார்கள். அதுதான் அரசுக்குக் கெட்ட பெயரை உண்டாக்கும்.

நிஜமான ஆட்சி மாற்றமும், நல்ல திட்டங்களும் வரக் கால அவகாசம் தேவைப்படும். ஒரே வாரத்தில் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது. இந்த சோசியல் மீடியாக்கள் உருவாக்கும் அளவுக்கு அதிகமான கற்பனை எதிர்பார்ப்புகளை உலகத்தில் எந்த ஒரு அரசாங்கத்தாலும் நிஜத்தில் செய்து காட்ட முடியாது.

எனவே, செய்தி மக்கள் தொடர்புத் துறை என்பது வெறும் விளம்பரத் துறையாக இல்லாமல், இணையத்தில் பரவும் இது போன்ற பொய்களை உடனுக்குடன் கண்டுபிடித்து மக்களுக்கு உண்மை எது என்று சொல்லும் ஒரு அமைப்பாக மாற வேண்டும் என்று 'தி ஹிந்து' பரிந்துரைக்கிறது.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, முதலமைச்சர் விஜய் அவர்களே நேரடியாக முன்வந்து, தனது ஆதரவாளர்களின் இந்த அதீதப் பொய்ப் புகழ்ச்சிகளையும், வதந்திகளையும் பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டும். அது விமர்சகர்களுக்காக அல்ல, தனது அரசின் நம்பகத்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள அவரே செய்ய வேண்டிய அவசியமான காரியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+