சென்னையில் இரவு நேரங்களில் திடீர் மின் தடை ஏற்படுவது ஏன்? அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை உள்பட பல இடங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு குறித்த கேள்விக்கும் அமைச்சர் நிர்மல் குமார் பதில் அளித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடுமையாக அவதி அடைந்துள்ளனர். இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு போன் செய்தால் அதிகாரிகள் போனை எடுக்காத சூழல் நிலவுகிறது.

நேற்று, சென்னையின் பெரும்பாலான பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டது. நள்ளிரவு 2 மணி வரை மின்சாரம் வரவில்லை. மேலும் 2 மணி முதல் 3 மணி வரை குறைந்த மின்னழுத்தம் அதிகப்படியான மின்னழுத்தமும் வந்ததால் பொதுமக்கள் தூங்காமல் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "சென்னையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் தடை குறித்து புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 160க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு காரணங்களால் தோண்டப்பட்ட குழிகள் காரணமாக வயர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. சீராக மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. மின்துறையில் சீரமைக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் ரூ.2.5 லட்சம் கோடி கடனில் உள்ளது. பல டெண்டர் முறைகேடுகள் நடந்துள்ளன. நிர்வாகத்தை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
சோலார் பேனல் கொள்முதல் விவகாரத்தில் விதிமுறை மீறல் நடந்துள்ளது. மின்வாரியத்தில் தவறுகள் கண்டறியப்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்தடை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டாலும் உடனடி நடவடிக்கை எடுகப்படும். 1.40 லட்சம் பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 70 ஆயிரம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். டிஎன்பிஎஸ்சி பணி நியமனத்தில் எந்த வித முறைகேடும் நடக்காது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications