நள்ளிரவில் திடீரென கொட்டிய பண மழை.. அள்ளி சென்ற பொதுமக்கள்! நடுவில் நின்ற ஆம்புலன்ஸ்.. என்ன நடந்தது?
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் திடீரெனப் பணமழை கொட்டியது. அப்பகுதியில் சென்றவர்கள் இந்தப் பணத்தை அள்ளி செல்ல வாகனங்களை அப்படியே நிறுத்திவிட்டு ஓடி வந்தனர். இதனால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், அதில் ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நீங்கள் சாலையில் சென்று கொண்டு இருக்கும்போது திடீரெனப் பணமழை கொட்டினால் எப்படி இருக்கும்.. அந்தப் பணத்தை அப்படியே அள்ளி சென்றுவிடுவீர்கள் தானே.. அப்படியொரு சம்பவம் தான் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. அங்கு புலந்தஷரில் உள்ள பஹாசு என்ற பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு திடீரெனப் பணமழை கொட்டியுள்ளது.

பண மழை
வானத்தில் இருந்து மழை பெய்வது போல நோட்டுகள் கீழே சிதறியதால், அங்கிருந்த மக்கள் அவற்றை அள்ளிக் கொள்ள முண்டியடித்தனர். இதனால் அலிகர் சாலையில் டிராபிக் நெரிசல் ஏற்பட்டது. அலிகர் பேருந்து நிலையம் அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அதாவது அப்பகுதியில் ஒரு திருமண ஊர்வலம் நடந்து வந்த நிலையில், அப்போது சாலையில் பணம் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமணத்திற்கு வந்த சிலர் தங்கள் கார் மேற்கூரையில் நின்று கொண்டு ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசியதால் ஏற்பட்டது. தங்கள் காரின் ஹாரனை அடித்துக் கொண்டே காரில் இருந்து இளைஞர்கள் பணத்தை வீசியுள்ளனர்.
கொட்டிய ரூபாய் நோட்டுகள்
திடீரென வானத்தில் இருந்து பணமழை பெய்வது போல ரூபாய் நோட்டுகள் பெய்ய ஆரம்பித்தது. இதைப் பார்த்த அவ்வழியாகச் சென்றவர்கள் உடனடியாக நோட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டனர். இந்தப் பணம் மழை தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பஹாசுவின் எப்போதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்று அலிகர் பேருந்து நிலையம். அந்த இடத்தில் போக்குவரத்திற்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்குக் கொஞ்ச நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் தான் போலீஸ் சாவடி அமைந்துள்ளது. ஆனாலும், போலீசார் இதைத் தடுக்காதது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
திருமண ஊர்வலம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு பஹாசுவின் பதான் டோலா பகுதியைச் சேர்ந்த ஒருவரின் திருமண ஊர்வலம் அலிகர் சாலையில் நடந்துள்ளது. அப்போது அந்தத் திருமண ஊர்வலம் அங்கிருந்த ஒரு மண்டபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. மணமகன் பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் தார் காரில் வந்த இளைஞர்கள் சிலர் ₹10 நோட்டுகளை வீசினர்.
பணம் வீசப்பட்டதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸும் இந்த நெரிசலில் சிக்கியது. இந்தச் சம்பவத்தின் வீடியோவை யாரோ ஒருவர் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, போலீஸ் டிஜிபியை டேக் செய்தார். இந்தச் சம்பவம் இணையத்தில் பேசுபொருளான நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்குப்பதிவு
பணத்தை வீசிய இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பணத்தை வீசியது புலந்தஷரை சேர்ந்த ஆஸ்மி, டெல்லியைச் சேர்ந்த ஜூமேர், பஹாசுவைச் சேர்ந்த ராஜு கான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் மீது பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பஹாசு போலீஸ் ஆய்வாளர் அசோக் குமார் சிங் கூறுகையில், "தார் கார் பறிமுதல் செய்யப்பட்டு ₹12,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக நான்கு இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications