அதிகாலை 4 மணிக்கு வந்த அந்த மெயில்.. கதறி துடித்த 8000 ஊழியர்கள்.. ஒரே நொடியில் எதிர்காலமே போச்சு!
சியாட்டில்: ஏஐ வந்த பிறகு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. குறிப்பாக ஐடி துறையில் வேலை செய்வோர் அடிக்கடி பணிநீக்கத்தை எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதற்கிடையே பேஸ்பேக், இன்ஸ்டாவின் தாய் நிறுவனமான மெட்டா தனது ஊழியர்களில் 10 சதவீதப் பேரை, அதாவது சுமார் 8,000 ஊழியர்களை ஒரே இமெயிலில் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. அதிகாலை வந்த இந்த மெயிலை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே டெக் மற்றும் ஐடி நிறுவனங்கள் மொத்தமாக மாறி வருகின்றன. இந்த நிறுவனங்கள் ஏஐ நோக்கி நகர்ந்து வருவதால் தொடர்ச்சியாக ஆட்குறைப்பைச் செய்து வருகிறது. புதிதாக ஆட்களை எடுப்பதைக் குறைத்து, ஏற்கனவே இருக்கும் ஆட்களை வீட்டுக்கு அனுப்பி, அதற்குப் பதிலாக ஏஐ-ல் அதிக முதலீடுகளைச் செய்து வருகின்றன.

மெட்டா
அதன்படி பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா இந்த மிகப் பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. நிறுவனத்தை மறுசீரமைப்பதாகச் சொல்லி சுமார் 8000 பேரை மெட்டா பணிநீக்கம் செய்துள்ளது. உலகெங்கும் மெட்டா ஊழியர்கள் வேலை செய்து வரும் நிலையில், அவர்களின் டைம் ஜோன் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக இந்த பணிநீக்க இமெயில்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
4 மணிக்கு வந்த மெயில்
மெட்டாவின் ஆசியத் தலைமையகமான சிங்கப்பூரில் உள்ள ஊழியர்களுக்கு இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 4:00 மணிக்கே (இந்திய நேரப்படி நள்ளிரவு 1:30 மணி) "உங்களுக்கு வேலை இல்லை" என்ற அதிர்ச்சி இமெயில் வந்து சேர்ந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் உள்ள ஊழியர்களை இன்று தங்களின் வீடுகளில் இருந்தே வேலை செய்யுமாறு மெட்டா கூறியிருந்தது. இதன் மூலம் இமெயில் மூலமாகவே யாருக்கு வேலை இருக்கிறது, யாருக்குப் போனது என்பது தெரிவிக்கப்படும். இந்த விஷயத்தை நேரில் சொன்னால் தேவையற்ற குழப்பம் ஏற்படும் என்பதாலேயே இந்த ஏற்பாடு!
அதேநேரம் இந்த அதிரடி மாற்றங்கள் வெறும் பணிநீக்கத்தோடு மட்டும் நின்றுவிடாது என்கிறார் மெட்டாவின் மனிதவள மேம்பாட்டுத் துறை முதன்மை அதிகாரி ஜானெல்லே காலே. 8000 பேரை பணிநீக்கம் செய்ததோடு, 7000 பேர் புதிய ஏஐ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், 6000 காலியிட அறிவிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இத்தனை காலம் பெரிய பெரிய டீம்களோடு மெட்டா வேலை செய்து வந்த நிலையில், அதை மாற்றி இனி வரும் காலங்களில் சிறிய டீம்களை உருவாக்கப் போவதாகவும் காலே தெரிவித்தார். இதன் மூலம் வேலைகள் சீக்கிரம் நடக்கும் என்று காலே விளக்கியுள்ளார்.
வெறுப்பு
மெட்டாவின் இந்த மெகா பணிநீக்கம் குறித்துக் கடந்த மாதமே தகவல்கள் வெளியானது. இதனால் மெட்டா ஊழியர்கள் நாளை வேலை இருக்குமா இருக்காதா எனத் தெரியாமல் மிகப் பெரிய குழப்பத்தில் தான் வேலை செய்து வந்தனர். மேலும், இதனால் ஆத்திரமடைந்த சில ஊழியர்கள், ஆபீஸில் இருக்கும் இலவசத் தின்பண்டங்கள் மற்றும் லேப்டாப் சார்ஜர்களை கூட அள்ளிச் செல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.
அடுத்த பகீர் திட்டம்
இவை அனைத்திற்கும் மேலாக, ஊழியர்களின் லேப்டாப்களில் 'மாடல் கேப்பபிலிட்டி இனிஷியேட்டிவ்' (Model Capability Initiative) என்ற புதிய சாப்ட்வேரை மெட்டா கட்டாயமாக நிறுவியுள்ளது. இது ஊழியர்கள் கீபோர்டில் என்ன டைப் செய்கிறார்கள், அவர்களின் மவுஸ் எப்படி நகர்கிறது என்பதை அணு அணுவாகக் கண்காணிக்கும். இந்த டேட்டாவை வைத்தே எதிர்காலத்தில் மனிதர்களுக்குப் பதிலாக வேலை செய்யும் AI ஏஜென்ட்களை மெட்டா ட்ரெய்ன் செய்யப்போகிறது! இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கையெழுத்திட்டுப் போராடி வருகின்றனர். ஆனாலும் மெட்டா தனது முடிவில் பின்வாங்குவதாக இல்லை. காரணம் ஏஐ தான்.
கூகுள் மற்றும் ஓபன்ஏஐ ஆகியவற்றுக்கு இணையாகத் தானும் AI ரேஸில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே ஜுக்கர்பெர்க் இந்த ஆட்குறைப்பை நடத்தியுள்ளார். இந்த ஆண்டு மட்டும் மெட்டா $125 பில்லியன் முதல் $145 பில்லியன் டாலர் வரை AI உள்கட்டமைப்புக்காக மட்டுமே வாரி இறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் இதர செலவுகளை குறைக்கவே இந்த ஆட்குறைப்பைச் செய்கிறது. அதேநேரம் மெட்டா மட்டுமின்றி, சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களும் ஏஐ நோக்கி நகர்கின்றன. சிஸ்கோ, மைக்ரோசாப்ட், அமேசான் மற்றும் ஆரக்கிள் என ஒட்டுமொத்த டெக் உலகமும் இப்போது ஊழியர்களை வேலையை விட்டு நீக்கிவிட்டு AI நோக்கி நகர்ந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications