இந்தியாவில் "ஸ்பெஷல்" ஆபரேஷனை நடத்தும் இஸ்ரேல்! 5000+ இந்தியர்களை வைத்து போடும் திட்டம் என்ன?
டெல் அவிவ்: இஸ்ரேல் எப்போதும் தனது நாட்டுக் குடிமக்களை விட்டுவிடாது என்பார்கள்.. எவ்வளவு கடினமான சூழல் என்றாலும் ஒரு நபரைக் கூட விடாமல் மீட்டு வருவது தான் இஸ்ரேலின் சிறப்பு. இதற்கிடையே இந்தியாவில் இருந்து சுமார் 5000க்கும் மேற்பட்டோரைத் தனது தாய்நாட்டிற்கு அழைத்துச் செல்லும் பணிகளில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் முக்கியமானது மணிப்பூர். இந்தியாவின் முக்கியமான எல்லை மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் மணிப்பூரில் கடந்த சில ஆண்டுகளாகவே இன கலவரம் நடந்து வருகிறது. அங்கு இரு பிரிவினருக்கும் இடையே நடக்கும் மோதலால் மிக மோசமான ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மணிப்பூர்
மணிப்பூரின் மலைப் பகுதிகளில் இனக்கலவரம் ஒருபுறம் நீடித்துக்கொண்டிருக்க, மறுபுறம் அங்கிருக்கும் 'ப்னே மனாஷே' (Bnei Menashe) சமூகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பேரை இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லும் 'ஆபரேஷன் விங்ஸ் ஆஃப் டான்' என்ற மிகப்பெரிய திட்டத்தை இஸ்ரேல் அரசு தொடங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக, 250 பேர் கடந்த வியாழக்கிழமை டெல்லி வழியாக இஸ்ரேலுக்குச் சென்றனர். வன்முறை பாதித்த ஒரு பகுதியிலிருந்து (மணிப்பூர்), போர் மேகங்கள் சூழ்ந்த மற்றொரு பகுதிக்கு (டெல் அவிவ்) இவர்கள் பயணிக்கிறார்கள்.
யார் இந்த 'ப்னே மனாஷே'?
பைபிள் படி, இஸ்ரேலின் பண்டைய 12 பழங்குடி இனங்களில் ஒன்று தான் இந்த 'மனாஷே'. கி.மு. 722-ல் ஆசிரியர்களால் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகள் ஆப்கானிஸ்தான், திபெத், சீனா எனப் பல நாடுகளைக் கடந்து, இறுதியில் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான மணிப்பூர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இவர்கள் குடியேறினர்.
என்ன காரணம்
இவர்களை 'இஸ்ரேலின் தொலைந்துபோன பழங்குடியினர்' என்று யூத உலகம் கருதுகிறது. மணிப்பூரில் இவர்கள் 'குக்கி இனத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாலும், ஒரு பிரிவினர் இன்னமும் யூத மதச் சடங்குகளையும் கலாச்சாரத்தையும் பின்பற்றி வருகின்றனர். இருப்பினும், மணிப்பூரின் குக்கிராமங்களில் யூத மதச் சடங்குகளுக்குத் தேவையான 'மின்யான், அதாவது 10 மத பெரியவர்கள் கொண்ட குழு, கிடைப்பது அரிதாக உள்ளது. இஸ்ரேலில் தங்களின் மதத்தை முழுமையாகப் பின்பற்றலாம் என அவர்கள் நம்புகிறார்கள்.
இந்தியாவில் விவசாயிகளாகவும் கூலித் தொழிலாளிகளாகவும் இருக்கும் இவர்கள், இஸ்ரேலில் கட்டுமானப் பணி அல்லது லாரி ஓட்டுநர்களாகச் சேர்ந்தால் ஆண்டுக்கு சுமார் $55,000 (இந்திய மதிப்பில் சுமார் ₹45 லட்சம்) வரை சம்பாதிக்க முடியும் என்று கருதுகிறார்கள். 2023 மே மாதம் முதல் மணிப்பூரில் நிலவும் மெய்தி - குக்கி இனக்கலவரம் இவர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. இதன் காரணமாகவே இவர்கள் இஸ்ரேல் செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள்.
இஸ்ரேலின் நோக்கம் என்ன?
இஸ்ரேல் இவர்களைத் தாய்நாட்டிற்கு அழைப்பதற்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.. ஹமாஸ் மற்றும் ஈரானுடனான போரினால் இஸ்ரேலில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து, நேபாளத் தொழிலாளர்கள் வெளியேறியதால், அந்த இடத்தைப் பூர்த்தி செய்ய இவர்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இவர்களை வடக்கு இஸ்ரேல் மற்றும் கலிலி போன்ற எல்லைப் பகுதிகளில் குடியேற்றுவதன் மூலம், அங்குள்ள மக்கள் தொகையைச் சமன்படுத்த இஸ்ரேல் விரும்புகிறது. ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட ப்னே மனாஷே இளைஞர்கள் இஸ்ரேல் ராணுவத்தில் ஹமாஸுக்கு எதிராக களத்தில் போரிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இவர்களை ராணுவத்திற்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும்!
சிக்கல்கள்
அதேநேரம் இஸ்ரேலுக்குச் சென்றாலும் இவர்களுக்குச் சில சவால்கள் காத்திருக்கின்றன. ஏற்கனவே இஸ்ரேல் சென்ற சில மனாஷே இன மக்கள் இஸ்ரேலில் இனவெறி தாக்குதல்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கிறார்கள். அதாவது தங்களின் தோற்றத்தின் காரணமாக அங்கே இவர்கள் சீனர்கள் என இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாவதாகச் சொல்கிறார்கள். மேலும், பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த இவர்கள் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாறுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
"இந்தியா எங்களின் பிறந்த மண்; ஆனால் இஸ்ரேல் எங்களின் விதி" என்று இந்த மக்கள் கூறுகின்றனர். மணிப்பூரில் வன்முறைக்கு மத்தியில் வாழும் இவர்களுக்கு, இஸ்ரேல் ஒரு பாதுகாப்பான புகலிடமாகத் தெரிகிறது. ஆனால், அங்கு நிலவும் போர்ச் சூழல் இவர்களின் இந்த 'சொர்க்கக் கனவை' நனவாக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி!












Click it and Unblock the Notifications