ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்! லீக் ஆனா.. பெரிய பிரச்சனை! அமெரிக்கா சொன்ன மேட்டர்
தெஹ்ரான்: ஓமன் கடல் பகுதியில் பயணித்த ஈரான் கப்பலை சமீபத்தில் அமெரிக்கா கைப்பற்றியிருந்தது. இந்த கப்பலில் ஆபத்தான ரசாயனங்கள் இருப்பதாகவும், இது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் எனவும் அமெரிக்கா தற்போது தெரிவித்திருக்கிறது.
'MV Touska' என்ற ஈரானிய சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை ஏப்ரல் 18 அன்று சிறைப்பிடித்தது. இந்த கப்பலில் அப்படி என்னதான் இருந்தது? ஏன் அதை அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் என்று சர்வதேச அளவில் கேள்விகள் எழுந்தன.

கப்பலில் என்ன இருந்தது?
இந்நிலையில், இதற்கு விளக்கமளித்துள்ள அமெரிக்காவின் குடியரசுக் கட்சித் தலைவரான நிக்கி ஹேலி, இந்தக் கப்பல் சீனாவிலிருந்து ஈரான் நோக்கிச் சென்றதாகவும், அதில் ஏவுகணைகளுக்கான வேதிப் பொருட்கள் இருந்ததாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிகாரிகள் இந்தக் கப்பலில் இருந்த ரசாயனங்களை 'Dual-use' எனக் குறிப்பிடுகின்றனர். அதாவது, இவை உரம் தயாரிப்பதற்கோ அல்லது பெயிண்ட் தொழிற்சாலைகளுக்கோ பயன்படுத்தப்படலாம். அதே சமயம், இவற்றைச் சுத்திகரிப்பதன் மூலம் ஏவுகணைகளுக்கான வெடிபொருட்களாகவும் மாற்ற முடியும்.
சீனா டூ ஈரான்
மிக முக்கியமாக இந்த கப்பலில், அம்மோனியம் பெர்குளோரேட் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது திட எரிபொருள் ஏவுகணைகளில் மிக முக்கியமானது. ராணுவ ஏவுகணைகளை ஏவுவதற்கு இது அத்தியாவசியமானது. இத்துடன் அலுமினியம் பவுடரும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது எரிபொருளின் ஆற்றலை அதிகரிக்க சேர்க்கப்படுகிறது.
இது தவிர, ஹைட்ராசின் மற்றம் பாலீமர்கள் இருப்பதாகவும் பலரும் கூறுகின்றனர். இதில், ஹைட்ராசின் என்பது திரவ எரிபொருள் ஏவுகணைகளில் உந்துசக்தியாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை ரசாயனம் ஆகும்.
ஈரானின் மறுப்பு
ஈரான், சாதாரண மக்கள் பயன்பாட்டுக்காக இந்த பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறிக்கொண்டு, சீனாவின் உதவியுடன் மறைமுகமாகத் தனது பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தை வலுப்படுத்துகிறது என்று நிக்கி ஹேலியின் குற்றம் சாட்டியிருக்கிறார். ஆனால், ஈரான் இதை முழுமையாக மறுத்துள்ளது. கப்பலில் வந்த சரக்கு அனைத்தும் தொழில்துறை சார்ந்த மூலப்பொருட்கள் மட்டுமே என்று விளக்களித்துள்ளது.
அமெரிக்காவின் கேம்
அமெரிக்கா இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் காலம் ரொம்பவும் முக்கியமானது. அதாவது, தற்போது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான்-அமெரிக்க அதிகாரிகளிடையே இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. இந்த சமயம் பார்த்து அமெரிக்கா இப்படியான குற்றச்சாட்டை வைத்திருப்பது ஈரானை சூடேற்றியிருக்கிறது. எனவே, கடற்படை முற்றுகையை விலக்காத வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை ஈரான் அடித்து சொல்லிவிட்டது.
இதையெல்லாம் பார்க்கும்போது, இந்த போர் இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதன் தாக்கம் இந்தியா போன்ற நாடுகளில் ஆண்டு கணக்கில் இருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications