கண்ணீர் விடாத குறையாக ஷெபாஸ் ஷெரீப் புலம்பல்.. ஊசலாடும் பாகிஸ்தான் நிலைமை!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையான பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் போராடும் இதேவேளையில், அந்நாட்டின் பொருளாதாரம் ஈரான் போரால் ஊசலாடி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பல கட்டுப்பாடுகள், மாற்றங்கள் மூலம் சிறிய அளவில் முன்னேற்றம் கண்ட பாகிஸ்தான் பொருளாதாரம் ஈரான் போர் மூலம் மீண்டும் கடினமான கட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் சுமை
ஈரான் போர் பாதிப்புகளால் பாகிஸ்தானின் மாதாந்திர எண்ணெய் இறக்குமதி செலவு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. ஈரான் போருக்கு முன்பு 300 மில்லியன் டாலராக இருந்த செலவு இப்போது 800 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்த திடீர் உயர்வு பாகிஸ்தான் நாட்டின் அன்னிய செலாவணிகள் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடந்த சில வாரங்களில் பெட்ரோலியப் பொருட்களின் உள்நாட்டு நுகர்வும் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விலை உயர்வு மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாக மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த விலை உயர்வை தாண்டி பாகிஸ்தான் நாட்டின் கடனும் அந்நாட்டின் பொருளாதாரத்தை நெருக்கி வருகிறது.
பாகிஸ்தானின் சோககதை
பொருளாதார அழுத்தம் இருந்தபோதிலும், பாகிஸ்தான் தன்னை ஈரான் - அமெரிக்கா மத்தயிலான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து மத்தியஸ்தராக நிலைநாட்ட முயன்று வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்தபடி, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாகிஸ்தான் உதவியுள்ளது.
ஏப்ரல் 11 அன்று இஸ்லாமாபாத்தில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை 21 மணி நேரம் நீடித்தன. தற்போது போர்நிறுத்தம் அமலில் உள்ளது என்றும், அதைத் தொடர்ந்து உரையாடலை நீடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதற்கு மத்தியில் நாட்டின் நிதி நிலையும், பொருளாதாரமும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.
இக்கட்டான நிலையில் பாக். பொருளாதாரம்
பாகிஸ்தான் பொருளாதார நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க பாகிஸ்தான் அரசு ஒரு தனி பணிக்குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு தினசரி அடிப்படையில் சூழலை மதிப்பீடு செய்து, சவால்களை சமாளிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான இறக்குமதி செலவு, விநியோகப் பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை எதிர்கொள்ள அரசு தீவிரம் காட்டி வருகிறது.
3.45 பில்லியன் டாலர் கடன்
பொருளாதார அழுத்தத்துக்கு மத்தியில் மற்றொரு பெரிய சவால் பாகிஸ்தானை சூழ்ந்தது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (UAE) 3.45 பில்லியன் டாலர் அளவிலான வைப்பு நிதியை பாகிஸ்தான் முழுமையாக திருப்பி செலுத்தியுள்ளது. ஏப்ரல் 24ஆம் தேதி இந்தத் தொகை திருப்பி அளிக்கப்பட்டது.
ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ரோல்ஓவர் முறையை உடைத்து, அமீரகம் திடீரென பணத்தை திருப்பிக் கேட்டதால் பாகிஸ்தானின் வெளிநாட்டு நிதி இருப்புக்கு பெரும் சவால் ஏற்பட்டது. இந்தத் தொகையை இரண்டு கட்டங்களாக செலுத்தியுள்ளனர். ஏப்ரல் நடுப்பகுதியில் 2.45 பில்லியன் டாலரும், ஏப்ரல் 23 அன்று மீதமுள்ள 1 பில்லியன் டாலரும் செலுத்தப்பட்டது.
இந்த கடனை திருப்பி செலுத்த சவுதி அரேபியா அரசு பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர் நிதி உதவி அளித்ததால் இந்தக் கடனை திருப்பி செலுத்த முடிந்தது.
பாகிஸ்தான் எதிர்காலம்
அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்தால் பாகிஸ்தானின் பொருளாதார கூடுதலான நெருக்கடியை எதிர்கொள்ளும், ஏற்கனவே அந்நாடு IMF அமைப்பிடம் இருந்து நிதியுதவியை பெற்று தான் அரசை நடத்தி வருகிறது.
இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் உடன் போர், அமெரிக்கா - ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தைக்கு தலைமை, ஐக்கிய அரபு அமீரகத்தின் கடன் தீர்த்தது, கச்சா எண்ணெய் விலை உயர்வால் தொடர்ந்து அன்னிய செலாவணி குறைவது என பாகிஸ்தானை சுத்தி சத்தி பல விஷயங்கள் பாதித்து வருகிறது.












Click it and Unblock the Notifications