சிஎஸ்கேனா சும்மா இல்ல தம்பி.. திறமையை நிரூபித்த கார்த்திக் சர்மா.. இனி கட்டுப்படுத்த முடியாது!
சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் கார்த்திக் சர்மா தனது முதல் அரைசதத்தை விளாசி அசத்தி இருக்கிறார். இதன் மூலமாக ரூ.14.2 கோடிக்கு வாங்கப்பட்ட கார்த்திக் சர்மா, அழுத்தத்தை மீறி திறமையை நிரூபித்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தரமான வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. மும்பை அணிக்காக நமன் திர் 37 பந்துகளில் 57 ரன்களை சேர்த்தார். சிஎஸ்கே அணிக்காக அன்சுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 18.1 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 67 ரன்களையும், கார்த்திக் சர்மா 40 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரிகள் உட்பட 54 ரன்களையும் சேர்த்தனர். இந்தப் போட்டியில் இம்பேக்ட் பிளேயராக கார்த்திக் சர்மா நம்பர் 4 வரிசையில் களமிறக்கப்பட்டார்.
ஃபீல்டிங்கின் போது சர்ஃபராஸ் கான் சிறந்த கேட்சை பிடித்ததால், அவர்தான் இம்பேக்ட் பிளேயராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உர்வில் படேல் ஆட்டமிழந்த பின், உடனடியாக கார்த்திக் சர்மா களமிறக்கப்பட்டார். பவர் பிளே ஓவர்களின் போதே கார்த்திக் சர்மா களத்திற்கு வந்ததால், அவருக்கு செட்டிலாக நேரம் கிடைத்தது.
முதலில் 18 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த கார்த்திக் சர்மா, ஹர்திக் பாண்டியா பந்தில் ஒரு சிக்சரை விளாசி நம்பிக்கையை அதிகரித்து கொண்டார். இதையடுத்து அல்லா கசன்ஃபர் வீசிய 17வது ஓவரில் 4, 6, 4 என்று கார்த்திக் சர்மா விளாசியது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. அவரின் பேட் ஸ்விங் வர்ணனையாளர்களிடமும் பாராட்டுக்களை பெற்றது.
சிறப்பாக ஆடிய கார்த்திக் சர்மா 39 பந்துகளில் தனது முதல் அரைசதத்தை எட்டினார். கார்த்திக் சர்மாவுக்கு சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக வாய்ப்புகளை அளித்து வந்தது. ஒவ்வொரு முறையும் கார்த்திக் சர்மா பதற்றத்துடன் விளையாடி அவுட்டாவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் இம்முறை பதற்றமாக இருந்தாலும், விக்கெட்டை காப்பாற்றி அரைசதம் அடித்துள்ளார். இதனால் வரும் போட்டிகளில் கார்த்திக் சர்மா கூடுதல் நம்பிக்கையுடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications