அமெரிக்காவில் அடித்தால், இந்தியாவில் எதிரொலிக்கும்.. அதானி குழுமம் வேலையை காட்ட துவங்கியது!
சென்னை: அமெரிக்காவில் நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்த உடனேயே அதானி குழுமம் தனது விரிவாக்கத் திட்டங்களை வேகப்படுத்தியுள்ளது. கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் (JAL) நிறுவனத்தின் முக்கிய சொத்துக்களை கிட்டத்தட்ட ரூ.5,700 கோடிக்கு வாங்கும் ஒப்பந்தம் செயல்பாட்டு கட்டத்துக்கு கொண்டு வந்துள்ளது அதானி குழுமம்.
இந்த ஒப்பந்தம் அதானி குழுமத்தின் மின்சாரம் உற்பத்தி பிரிவை பெரிய அளவில் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாக இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி பவர் பங்குகள் காலையில் வர்த்தகம் துவங்கும் போது 223.35 ரூபாயில் துவங்கி 226.40 ரூபாய் வரையில் உயர்ந்தது. ஆனால் கடந்த ஒரு மணிநேரமாக சரிவில் தத்தளித்து வருகிறது அதானி பவர் பங்குகள்.

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு ரூ.5,700 கோடி மதிப்பிலான சொத்து பரிவர்த்தனைகளை மேற்பார்வையிடும். இதில் பல முக்கிய ஒப்பந்தங்கள் அடங்கியிருக்கும் காரணக்தாலும், இந்நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்களுக்கு சொத்து பரிமாற்றத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இதன் அடிப்படையில் அதானி பவர் நிறுவனத்துக்கு ஜெய்பிரகாஷ் பவர் வென்ச்சர்ஸ் லிமிடெட் (JPVL) நிறுவனத்தில் உள்ள 24% பங்குகளை ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் ரூ.2,994 கோடிக்கு விற்பனை செய்ய உள்ளது. மேலும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள 180 மெகாவாட் கொள்ளளவு கொண்ட சுர்க் தெர்மல் பவர் திட்டத்தையும் தொடர்புடைய சொத்துக்களையும் ரூ.1,200 கோடிக்கு அதானி பவருக்கு மாற்ற உள்ளது ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ்.
இதுதவிர, ஜெய்பீ ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை (கான்பூர் உரத் தொழிற்சாலையின் உரிமை நிறுவனம்) ரூ.1,500 கோடிக்கு அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் இகானமிக் ஜோன் நிறுவனத்துக்கு விற்க உள்ளது. மேலும், பிரயாக்ராஜ் பவர் ஜெனரேஷன் கம்பெனியில் உள்ள 11.49% பங்குகளை அதானி பவர் ரூ.1,200 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தமும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் உடன் முடிவடைந்துள்ளது.
கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் இருக்கும் நிறுவனங்களையும், திவாலான நிறுவனங்களையும் குறைந்த விலையில் வாங்கி தனது வர்த்தகத்தை பெரிதாக விரிவாக்கி வருகிறது. ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் விவகாரமும் இந்த வரிசையில் முக்கியமான ஒன்றாகும்.
தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT) அலகாபாத் பெஞ்ச் அதானி குழுமத்தின் ரூ.14,535 கோடி தீர்வுத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. வேதாந்தா குழுமம் அதிக விலை கொடுத்த போதிலும், பெரும்பாலான கடன் கொடுத்தவர்கள் அதானி திட்டத்தையே ஆதரித்தனர். இதனால் இத்திட்டத்தை அதானி குழுமம் வென்றது.
இந்த ஒப்பந்தங்கள் அதானி பவர் நிறுவனத்தின் மின்சார உற்பத்தித் திறனை அதிகரிக்கும். JPVL நிறுவனத்தின் மின்சாரம், சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களைப் பயன்படுத்தி அதானி குழுமம் தனது எனர்ஜி துறை இருப்பை வலுப்படுத்தும். மேலும், உரத் தொழில் துறையிலும் அதானி குழுமம் வலுவான இடத்திற்கு முன்னேறும்.
இந்தக் தொத்து கைப்பற்றல் மற்றும் கைமாறும் செயல்முறை முழுமையடையும் வரை கண்காணிப்புக் குழு ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிடும். இந்த ஒப்பந்தம் அதானி குழுமத்தின் உள்நாட்டு விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாகும்.














Click it and Unblock the Notifications