எடப்பாடி VS சிவி சண்முகம்.. பிளவு அதிமுகவில் பாஜக சப்போர்ட் யாருக்கு? யாருமே எதிர்பாராத ட்விஸ்ட்
கோவை: அதிமுகவில் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அதிமுகவில் யார் பக்கம் பாஜக உள்ளது? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு அதிமுக விவகாரத்தில் பாஜக மேலிடம் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காணுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார நாகேந்திரன் சொன்ன பதில் என்பது கவனம் பெற்றுள்ளது.
அதிமுக இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 47 எம்எல்ஏக்களில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 22 எம்எல்ஏக்களும், எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்களும் செயல்பட்டு வருகின்றனர். இதில் எஸ்பி வேலுமணி தரப்பு முதல்வர் விஜய்யின் தவெக நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதோடு பாஜகவுடன் கூட்டணியில்லை என்று அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது. மொத்தம் 28 தொகுதிகளில் போட்டியிட்டு ஊட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் பாஜக, அதிமுக கூட்டணியில் இல்லை என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். ஆனால் இதுபற்றி எடப்பாடி பழனிச்சாமி இன்னும் எந்த பதிலையும் அளிக்கவில்லை.
இந்நிலையில் தான் கோவை பீளமேட்டில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் மையக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக அமைப்பு தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை வகித்தார். சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரன் ,எல்.முருகன் ,எச்.ராஜா, தமிழிசை சௌந்தர்ராஜன் ,வானதி சீனிவாசன், ஏ.பி முருகானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்துக்கு முன்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், '' தேர்தல் முடிந்த பிறகு அகில இந்திய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் மையக் குழு கூட்டம் நடைபெறுகிறது. அடுத்த கட்டத்திற்கு எப்படி மக்களை சந்திக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. கோவையில் மையக்குழு கூட்டம் நடத்துவதற்கான பிரத்தியேக காரணம் ஒன்றுமில்லை'' என்றார்.
இந்தவேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ''சட்டசபை தேர்தலில் அதிமுக ஒத்துழைக்கவில்லை என்று புகார் சொல்லப்படுகிறதே'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு நயினார் நாகேந்திரன்,''அ.தி.மு.க தேர்தலில் ஒத்துழைக்கவில்லை என்ற எந்தவிதமான தகவலும் இல்லை அது தொடர்பாக மைக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவும் இல்லை. தேர்தல் சம்பந்தமாக எதுவும் இதுவரை விவாதிக்கவில்லை'' என்றார்.
அதன்பிறகு ''அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று சிவி சண்முகம் கூறியுள்ளாரே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு நயினார் நாகேந்திரன், '' பாஜக அதிமுக இடையேயான உறவு தேர்தலுக்குப் பிறகு அதிமுக உடனான உறவு அமைதியாக இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு அவர்களுக்குள் உள்கட்சி பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அதைப் பற்றி எதுவும் கூற முடியாது'' என்றார்.
இதையடுத்து, ''அதிமுகவின் உள் கட்சி பிரச்சனையை தீர்க்க பாஜக உதவுமா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்காமல் என்றார். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று சிவி சண்முகம் வெளிப்படையாக அறிவித்த நிலையில் பாஜக மேலிடம் அவர் மீது கோபமாக இருக்கும். எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் பாஜக சாயும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அதுபற்றிய கேள்விக்கு தேர்தலுக்கு பிறகு அதிமுக உடனான உறவு அமைதியாக இருக்கிறது என்று மட்டுமே பதில் சொல்லி நயினார் நாகேந்திரன் நழுவியுள்ளார்.












Click it and Unblock the Notifications