அமைச்சரவையில் காங்கிரஸ்.. 59 வருஷம் பட்ட அவமானங்களுக்கு விடை கிடைச்சிருக்கு! மாணிக்கம் தாகூர் பேட்டி
சென்னை: 59 வருஷமாக பட்ட அவமானங்களும், பட்ட சிரமங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும் இன்று விடை கிடைத்திருக்கிறது. அதிமுகவும் ஆட்சி அமைத்திருக்கிறது. திமுகவும் ஆட்சி அமைத்திருக்கிறது. ரெண்டு பேரும் காங்கிரஸ் கட்சி பலத்தால் பல வெற்றிகளை பெற்றுள்ளார்கள். விஜய் இந்த மாடலை மாற்றியிருக்கிறார். கூட்டணி என்பது வெறும் எண்ணிக்கையை மட்டுமில்லை ஆட்சி அதிகாரத்திலும் பங்கு என்பதை நிரூபித்து இருக்கிறார் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அமைந்துள்ள தவெக ஆட்சியில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்யுடன் சேர்த்து 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நிலையில் இன்று மேலும் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். ஆளுநர் அர்லேகர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மாணிக்கம் தாகூர் பேட்டி
விஜய்யின் இந்த அமைச்சரவையில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது காங்கிரசார் மத்தியில் உற்சாகத்தினை ஏற்படுத்தி உள்ளது. இது மன நிறைவை தருவதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
சரியாக 59 ஆண்டுகளுக்கு பிறகு கதர் சட்டை அணிந்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்று இருப்பது மன நிறைவை தருகிறது. பொறுப்புணர்ச்சியுடன் ஒரு நேர்மையான அமைச்சர்களாக இருப்பார்கள். மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பார்கள். இதுவரை மக்களின் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் எழுப்புகின்ற நிலையில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இப்போது மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் இடத்திற்கு வந்து இருக்கிறோம்.
விஜய் மாற்றி இருக்கிறார்
மிக முக்கியமான உயர்வு.. எப்போதோ வந்திருக்க வேண்டியது. 20 வருஷம் கழித்து வந்து இருக்கிறது. மன நிறைவாக இருக்கிறது. 59 வருஷம் கழித்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்பது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. அதிமுகவும் ஆட்சி அமைத்து இருக்கிறது. திமுகவும் ஆட்சி அமைத்து இருக்கிறது. இரண்டு கட்சிகளும் கடந்த 59 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் பலத்தால் பல வெற்றிகளை பெற்றுள்ளார்கள். விஜய் இந்த மாடலை மாற்றியிருக்கிறார். இதுவரைக்கும் இருந்த மாடல் மாற்றப்பட்டு இருக்கிறது. கூட்டணி என்பது வெறும் எண்ணிக்கையை வாங்கிக் கொள்வது மட்டுமில்லை.. ஆட்சி அதிகாரத்திலும் பங்கு என்பதை நிரூபித்து இருக்கிறார்.
அவமானங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும் விடை கிடைத்திருக்கு
எங்களை பொறுத்தவரை விசிக மற்றும் ஐயுஎம் எல்லையும் அமைச்சரவையில் இணைக்க வேண்டும். அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பது தான் உண்மையான ஜனநாயகத்தின் பங்கு. அது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்போது தான் அதிகாரத்திற்கு வந்து இருக்கிறோம். இவ்வளவு நாட்களாக கோரிக்கை வைக்கும் இடத்தில் இருந்தோம். 59 வருஷமாக பட்ட அவமானங்களுக்கும், பட்ட சிரமங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும் இன்று விடை கிடைத்திருக்கிறது.
அதிகாரம் என்பது மக்களின் பிரச்சினையை தீர்க்கும் வகையில் இருக்கும். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். நேர்மையான அமைச்சர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். சாமானிய மக்களின் குறைகளை தீர்க்கும் அமைச்சர்களாக இருப்பார்கள். சாமானிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய அமைச்சர்களாக இருப்பார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.














Click it and Unblock the Notifications