முதல் ஓவரிலேயே 2 விக்கெட்ஸ்.. குஜராத் அணிக்காக மெகா சாதனையை படைத்த முகமது சிராஜ்!
அகமதாபாத்: குஜராத் அணிக்காக முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை முகமது சிராஜ் பெற்றுள்ளார். பஞ்சாப் அணியின் பிரியன்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கானலி ஆகிய இருவரையும் முதல் ஓவரிலேயே வீழ்த்தி முகமது சிராஜ் இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். கடந்த 3 போட்டிகளாகவே குஜராத் அணியின் பவுலிங் சிறப்பாக இருக்கிறது. சிஎஸ்கே, ஆர்சிபி உள்ளிட்ட அணிகளையும் கூட எளிதாக 160 ரன்களுக்குள் குஜராத் அணி கட்டுப்படுத்தியது.

அதே ஸ்டைலில் இந்தப் போட்டியையும் குஜராத் அணி அணுகியது. டாஸ் வென்று பவுலிங் தான் தங்களின் பலம் என்பதை உணர்ந்த சுப்மன் கில், உடனடியாக பவுலிங்கை தேர்வு செய்தார். அதற்கேற்ப முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே அதிரடி வீரர் பிரியன்ஷ் ஆர்யா 2 ரன்கள் எடுத்து 2வது பந்திலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கூப்பர் கானலி அடுத்த பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் பஞ்சாப் அணி 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் சூர்யான்ஷ் ஷெட்கே மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது. குஜராத் அணி தரப்பில் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும், சிராஜ் மற்றும் ரபாடா இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் முகமது சிராஜ் முக்கியமான ஒரு சாதனையை படைத்துள்ளார். முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலமாக குஜராத் அணிக்காக முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலர் என்ற பெருமையை முகமது சிராஜ் பெற்றுள்ளார். இது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
குஜராத் அணி 5 சீசன்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. இருப்பினும் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை ஒரு போட்டியில் கூட வீழ்த்தியதே இல்லை என்பது ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது. ஏனென்றால் குஜராத் அணி எப்போதும் வலிமையான பவுலிங் அட்டாக்கை வைத்திருந்துள்ளது.












Click it and Unblock the Notifications