சென்னையில் இன்று அதிகாலை நம்பவே முடியாத அளவிற்கு அருமையான மழை.. திகைக்க வைத்த வரலாறு
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேர கணக்கின்படி, சென்னையின் தெற்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் உள்ள பல இடங்களில் 100மிமீக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது . அதேபோல் சென்னையின் உள்பகுகிளின் வடக்கு பகுதிகளில் 70-100மிமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் நேற்று அதிகாலையும், இன்று அதிகாலையும் நல்ல மழை பெய்தது.குறிப்பாக இன்று அதிகாலை பெய்த மழை பலரையும் திக்குமுக்காட வைத்திருக்கும். தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மேடவாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம், துரைப்பாக்கம், பெருங்குடி என மொத்த தென்சென்னை பகுதிகளிலும், புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கியது கனமழை.

அதேபோல் ஓஎம்ஆர், ஈசிஆர் பகுதிகள், கிண்டி, சைதாப்பேடை, தேனாம்பேட்டை, வடசென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல் சூழ்ந்தது.
பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. குறிப்பாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளும் பகுதிகளில் மழைநீர் குளம் போல் ஆங்காங்கே தேங்கிக் காணப்படுகிறது. சென்னையில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக அதிகரித்திருக்க வாய்ப்பு உள்ளது.
இந்த ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு நல்ல மாதமாக உள்ளது. 2023ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் அதிகப்படியான மழையை அள்ளிக்கொடுத்துள்ளது சத்தமே இல்லாமல் கடந்த இரண்டு நாட்களில் நல்ல சம்பவத்தை செய்திருக்கிறது மழை. தாம்பரத்தில் 15 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
ஒட்டுமொத்தமாக சென்னை முழுவதும் இடி மின்னலுடன் நல்ல மழை பதிவாகியுள்ளது, நிச்சயமாக இது ஒரு சிறந்த ஆகஸ்ட் என்று வானிலை அப்டேட் கொடுப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சென்னையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 327 மில்லி மிட்டர் மழை பெய்துள்ளதாகவும், இது கடந்த 100 ஆண்டுகளில் 5வது மிகப்பெரிய மழை அளவு என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சென்னையில் கடைசியாக கடந்த 1995ம் ஆண்டு 376.8 மில்லி மீட்டர் மழை ஆகஸ்டில் பெய்திருந்தது. எனவே இந்த சாதனையை இந்த ஆண்டு முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை விமான நிலையப்பகுகிளில் நேற்றிரவு 68 மிமீ மழை பெய்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்னும் நாட்கள் இருப்பதாகல் இந்த மாதம் தென்மேற்கு பருவமழை மிகப்பெரிய அளவில் மழை பெய்த மாவட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சென்னையின் கனமழை காரணமாக வானிலை மொத்தமாக மாறி உள்ளது.குளுகுளு சிதோஷண நிலை காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications