பாரதி பக்கம்
10. அறிவே தெய்வம்
- கண்ணிகள்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்! - பல
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ! (1)
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்! - எத
னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ! (2)
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ!- பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ? (3)
வேடம்பல் கோடியோர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடும் - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே. (4)
நாமம்பல கோடியொர் உண்ண்ை குளவென்று
நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள் ளீரென்றந்
நான்மறை கண்டினதே. (5)
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே - உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரோ. (6)
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம் - நீவிர்
அவலை நினைத்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ? (7)
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே -இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ? (8)
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப் - பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ? (9)
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம் - என்றும்
ஒன்று பிரம முள துண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே. (10)