முகத்தில் தெளித்த சாரல்...
அன்பிற்காகவும், வெறுப்பிற்காகவும்-
நான் ஒரு ஈயை அடித்தேன்
எறும்பிற்குத் தின்னத் தந்தேன்
Shiki (ஷிகி) எழுதிய ஹைகூவின் ஆங்கில வரிகள்
For love and for hate
I swat a fly and offer it
to an ant
வெறுப்பும் அன்பும் வெவ்வேறானவையல்ல.
அவை எப்போதுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் -
ஒவ்வொரு வெறுப்பின் போதும் ஒரு அன்பு ஒளிந்து கொண்டிருக்கிறது -
வெறுப்பும் அன்பும்
இருளும் ஒளியும் பின்னிக் கிடக்கும்
அந்திப் பொழுதினைப் போல் இணைந்தே கிடக்கின்றன.
வெறுப்பைப் பார்ப்பவர்கள் விழிகளில் வெறுப்பு மட்டும் தெரிகிறது -
அன்பைக் காண்பவர்கள் கண்களில் அன்பு மட்டுமே தெரிகிறது.
நாய்க்குட்டியை நோக அடிக்கிற சிறுவனின் மீது
தோன்றும் வெறுப்பின் ஊற்றுக்கண்
அதன்மீது நமக்கிருக்கும் அன்பு
மேட்டிலிருந்து பள்ளத்திற்கு ஓடும் வெள்ளம் போல்
அன்புதான் நம்மை வெறுப்பிற்கு அழைத்துச் செல்கிறது.
ஏழ்மையில் உள்ளவர்கள் பால் கொண்ட அன்பு -
சுரண்டுபவர்கள் மீது வெறுப்பாகிறது.
மானின் மீது உள்ள அன்பு -
புலியின் மீது வெறுப்பாக மாறுகிறது.
ஞானத்தின் மீது உள்ள ஆர்வம்
அறியாமையின் மீது கோபமாக மாறுகிறது.
ஒன்றிலிருந்து ஒன்று - சங்கிலித் தொடராக மாறுகிறது.
அன்பு சுயநலமற்றது ஆனாலும்
சுயத்திலிருந்தே ஆரம்பமாவது
சுயத்திலிருந்து ஆரம்பாகும் எதுவும்
சுயநலமின்றி இருக்க முடியாது.
நமது வெறுப்பு முற்றிலுமான வெறுப்புமல்ல
நமது அன்பு முற்றிலுமான அன்புமல்ல
குழந்தைகளிடம் -
வளர்ப்பு மிருகங்களிடம் -
ஏற்படும் அன்பு எப்போதுமே முழுமையானவை -
அதில் ஒரு போதும் சுயநலமிருப்பதில்லை-
அதனால்தான் அவற்றின் சிரிப்பு அழகாயிருக்கிறது-
மனிதர்களின் சிரிப்பில் களங்கம் மண்டிக் கிடக்கிறது -
முழுமையாயிருக்கும் வெறுப்பு
அடுத்த கணமே கரைந்து போகிறது.
ஈயை அடித்து முதலில் நடந்தது -
ஈ யின் தொல்லையால் -
எறும்பிடம் உள்ள அன்பினால் அல்ல-
எறும்புக்கு யாரும் உணவு தேட அவசியமில்லை
அவை தானாகவே தேடிக் கொள்கின்றன.
ஈயை அடித்தபிறகு
அதை அப்புறப்படுத்துவதற்காகத்தான்
நாம் எறும்புகளை தின்னச் செய்கிறோம் -
அடுத்தது எறும்பு தொல்லை தந்தால்
அதையும் அடித்து
பல்லிக்குத் தருவோம் -
ஷிகி சொல்வது பேருண்மை-
வெறுப்புகளிலிருந்து விளிம்புக்குத் தாவாமல்
அன்பிலிருந்து கோபத்தை நோக்கி நகராமல்
நாம் செய்யும் செயல்கள்
கருணையால்
ஈரத்தல் விளையும் போது
தண்டனைகள் ஏதும் இல்லை -
வெறும் வரங்கள் மட்டுமே -
சாபங்களில்லை.