கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்
ஒரு காலத்துல ஒரு ராசா இருந்தாரு. மூணு பொண்டாட்டிக அவருக்கு.
மூணு இருந்தும் அவருக்குப் பேரு விளங்கப் பிள்ளை இல்ல. கவலயான கவல ராசாவுக்கு.
கோயிலுக்குப் போனாரு. குளத்துல முழுகுனாரு. விரதமிருந்தாரு. என்னென்ன உண்டுமோ அம்புட்டும் செய்து பாத்துட்டாரு. ஒண்ணும் பலிக்கல. பட்டத்துக்குபிள்ளை இல்லையேங்கிற கவலை. ஏக்கம்.
அப்பொ, ஒரு சாமியாரு வந்தாரு. அவரோட கால்ல விழுந்து, அழுது தொழுது பிள்ளையில்லேங்கிற வருத்தத்தை சொன்னாரு. ஒன்னோட குறைய தீர்த்துவைக்கிறேம்.கவலய விடுன்னாரு. ஓமம் வளத்து பூசை பண்ணி மூணு மாங்கனிகளத் தரவழைச்சாரு.
இந்தா, இந்தக் கனிகள நேர அரமணைக்கு கொண்டு போயி, ராணிகள்ட்ட ஆளுக்கு ஒரு கனிய கொடு. இத அவங்க வாங்கிக்கறத்துக்கு முன்னால குளிச்சிமுழுவி நல்ல சித்திபத்தியா இருக்கோணும் ன்னு சொல்லித் தந்தாரு.
ராசா புறப்படுறதுக்கு முன்னால ராணிகளுக்கு, இன்ன மாதிரி ன்னு தகவல் சொல்லி அனுப்பிச்சிட்டு போனாரு.
முதல் ராணி வந்து அதுபடியே கனிய வாங்கிட்டுப் போயிட்டா.
ரென்டாவது ராணியும் வந்து கனிய வாங்கிட்டுப் போயிட்டா.
மூணாவது ராணி எஙகேன்னு கேட்டாரு. இந்த வந்துருவாங்களாம்: குளிச்சிக்கிட்டிருக்காங்களாம் ன்னு தாக்கல் வந்தது.
கையில கனிய வச்சிக்கிட்டு ராசா காத்திருந்து காத்திருந்து பாத்தாரு. காணோம். சரியான நொரநாட்டியம் புடுச்சதுன்னு முனகிக்கிட்டே இருந்தாரு. வர்ராப்பலதெரியல. இளையராணி குளிச்சிக்கிட்டு இருக்கற இடத்துக்கே போனாரு. பாத்ததுதாம். ராசாவுக்கு நிலை கொள்ளல!
கையில இருந்த கனிய அங்கனக்குள்ள ஒரு இடத்துல வைச்சாரு. ராணியோட தண்ணிக்குள்ள இறங்கிட்டாரு. பாதகத்தி ஒன்ன இப்பிடிப்பாத்து எத்தன நாளாச்சின்னுசெல்ல வசவு வஞ்சிக்கிட்டே அவளோட, போடாத ஆட்டமெல்லாம் போட்டாரு.
நிலா உச்சியத் தாண்டீட்டது. அலுத்து சலுத்து தூங்கிட்டாக. மாம்பழம் மறந்து போச்சி!
ராசாவுக்கு முத முளிப்பு வந்ததும் துள்ளி எழுந்திரிச்சி ஓடுனாரு மாங்கனியப் பாக்க.
மாங்கனி இருந்தது. ஆனா அதனோட முனியில கொஞ்சம் எலி கறும்பியிருந்தது.
கனியக் கொடுத்தாரு. ராணி வாங்கிப்பாத்தா. எலி கறும்புன பழத்தையா எனக்குக் கொண்டாந்தீரு இது எனக்கு வேண்டாம் ன்னா.
அடி இவளே, இது அணில் கடிச்சது. எந்தக்கனி கிடைச்சாலும் அணில் கொறிச்ச கனி கிடைக்காது, சாப்புடுன்னாரு.
முடியாது. வேண்டாம். அவளுகளுக்கு மாத்திரம் நல்ல கனிகள கொடுத்துட்டு, வேணும்ன்னா எனக்கு எலி கறும்புன பழத்த கொண்டாந்திருக்கீருன்னுமுரண்டு பிடிச்சா.
ராசாவுக்கு ஆசை தீரலை. இன்னும் வேணும் போல இருந்தது. அவள எப்பிடி வழிக்குக் கொண்டுவரன்னு யோசிச்சாரு. அணில் கறும்புன கனிய தின்னாஅழகான பிள்ளை பிறக்கும்ன்னு பொய் சொன்னாரு.
இல்லெ: எலி போலத்தாம் பிள்ளெ பிறக்கும்ன்னு இளைய ராணி சொன்னா. எப்பிடிப் பிறந்தாலும் அது ராசா வீட்டுப் பிள்ளதாம்ன்னார் ராசா. எலிராசாவுக்கு பட்டம் கிடைக்குமான்னு கேட்டா ராணி.
ஓ கிடைக்கும்ன்னார் ராசா. சத்தியமா கிடைக்குமா ன்னு கேட்டா.
சத்தியமா கிடைக்கும்ன்னு ஆசையில வாக்குக் கொடுத்தார் ராசா.












Click it and Unblock the Notifications