பாரதி பக்கம்
பாரத தேசம்
ராகம் - புன்னாகவராளி
பல்லவி
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்
சரணங்கள்
1.வெள்ளிப் பனிமவைலயின் மீதுலவு வோம்: அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்:
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்: எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)
2.சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்:
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)
3.வெட்டுக் கனிகள் செய்து முதலாம்
வேறு பல பொருளும் குடைந் தெடுப்போம்
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)
4.முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே:
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)
5.சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேர நன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)
6.கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)
7.காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்:
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)
8.பட்டினில் ஆடையும், பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்:
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம். (பாரத)