பாரதி பக்கம்
(காவடிச் சிந்தில் அறுமுக வடிவேலனே என்ற மெட்டு)
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உண்ர்ந்திடு
குழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பினளாம் எங்கள் தாய்.(1)
யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயெங்கள் தாய் - இந்தப்
பாருள் நாளுமோர் கன்னிகை என்னப்
பயின்றிடு வாள் எங்கள் தாய். (2)
முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடை யாள்- இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள். (3)
நாவினில் வேத முடையவள் கையில்
நலந்திகழ் வாளுடை யாள் - தனை
மேவினார்க் கின்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள். (4)
அறுபது கோடி தடக்கை களாலும்
அறங்கள் நடத்துவள் தாய்- தனைச்
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவள் தாய். (5)
பூமி யினும்பொறை மிக்குடை யாள்பெரும்
புண்ணிய நெஞ்சினள் தாய் - எனில்
தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுத்
துர்க்கை யனையவள் தாய். (6)
சுற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
கைதொழு வாள்எங்கள் தாய் - கையில்
ஓற்றைத் திகிரிகொண் டேழுல காளும்
ஒருவனை யுந்தொழு வாள். (7)
யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்
ஒன்றென நன்றறி வாள் - உயர்
போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்
பொற்குவை தானுடை யாள். (8)
நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரி வாள்எங்கள் தாய் -அவர்
அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடு வாள். (9)
வெண்மை வளரிம யாசலன் தந்த
விறன்மக ளாம்எங்கள் தாய் - அவன்
திண்மை மறையினும் தான்முறை யாள்நித்தஞ்
சீருறு வாள்எங்கள் தாய். (10)